ஆளவந்தீரோ !!!
எம்மை ஆளவந்தீரோ !!!
ஆண்டாளின் ஆடியில்,
அவதரித்து எம்மை
ஆளவந்தீரோ !
உத்திராட நக்ஷத்திரத்தில்,
உலகம் முழுவதும்
ஆளவந்தீரோ !
காட்டுமன்னார்கோயிலில்
வந்து பகவானைக் காட்டி
ஆளவந்தீரோ !
நாதமுனிகளின்
பக்த சாம்ராஜ்ஜியத்தை
ஆளவந்தீரோ !
ஆக்கியாழ்வானின்
அட்டகாசத்தை அடக்கி,
ஆளவந்தீரோ !
ராணியின் பதிவிரதா
மஹிமையை நிரூபித்து
ஆளவந்தீரோ !
தூதுவளைக் கீரைக்கு
ஆட்பட்டு மணக்கால் நம்பியால்
ஆள வந்தீரோ !
பகவத்கீதையைக் கேட்டு உருகி,
அழகன் அரங்கன்
ஆள வந்தீரோ !
அரங்கனின் காதலில்,
அரங்கநாயகியின் அன்பில்,
காவியை ஆள வந்தீரோ !
நடமினோ அனந்தபுரம் என்ற
அரையரின் வார்த்தைக்கு,
அனந்தபத்மநாபனை ஆளவந்தீரோ !
ஆம் முதல்வன் இவன்
என்று எங்கள் யதிராஜனை
ஆளவந்தீரோ !
பெரியநம்பி,
திருக்கோஷ்டியூர் நம்பி,
திருமாலையாண்டான்,
திருவரங்கப் பெருமாள் அரையர்,
பெரிய திருமலை நம்பி,
போன்ற சிஷ்யரைக் கொண்டு,
ஸ்ரீவைஷ்ணவ சாம்ராஜ்யத்தை
என்றுமே ஆளவந்தீரோ !
மாறனேர் நம்பியைக் கொண்டு,
சாத்தாத முதலிகளையும்
ஆள வந்தீரோ !
ஆளவந்தாரே !
இன்று உமது திருநக்ஷத்திரம் !
ஒரு வரம் தாருங்கள் !
இதுவரை காமம் எங்களை ஆள்கின்றது !
கோபம் ஆள்கின்றது !
பயம் ஆள்கின்றது !
குழப்பம் ஆள்கின்றது !
கர்மவினை ஆள்கின்றது !
இனியாவது நீங்கள் மட்டுமே
எங்களை ஆள,
பூரணமாய் அருளுங்கள் !
ஆளவந்தாரே !
எம்மையும் ஆள்வீர் !
எம் வம்சத்தையும் ஆள்வீர் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக