நீ பிறந்த திருவாடிப்பூரம் !
தூது சொல்லடி !
என்னை உன் கிளியாக்கி,
தூது சொல்லடி...
ரங்கனின் உயர் கன்னி ஆண்டாளே !
காதல் சொல்லடி !
என்னை உன் மாலையாக்கி,
காதல் சொல்லடி...
சூடிக் கொடுத்த சுடர்கொடியே !
ஆசை சொல்லடி !
என்னை உன் ஆடையாக்கி,
ஆசை சொல்லடி...
அஞ்சுக்குடிக்கொரு சந்ததியானவளே !
பாசுரம் சொல்லடி !
என்னை உன் தோழியாக்கி,
பாசுரம் சொல்லடி...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையே !
கண்ணாடி காணடி !
என்னை உன் கண் மையாயிட்டு,
கண்ணாடி காணடி...
பிஞ்சாய் பழுத்தவளே !
புலம்பல் செய்யடி !
என்னை உன் மூக்குத்தியாக்கி,
புலம்பல் செய்யடி...
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாளே !
கைத்தலம் பற்றடி !
என்னை உன்கை மருதாணியாக்கி,
கைத்தலம் பற்றடி...
திருப்பாவை பாடிய செல்வியே !
அம்மி மிதிப்பாயடி !
என்னை உன் பாத மெட்டியாக்கி,
அம்மி மிதிப்பாயடி...
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாளே !
அழைத்துச் செல்லடி !
என்னை உன் கோபாலசுந்தரியாக்கி,
அழைத்துச் செல்லடி...
ஸ்ரீவில்லிபுத்தூர் நாயகியே !
உன்னிடமே வைத்துக்கொள்ளடி !
என்னை உன் திருமுலையாக்கி,
உன்னிடமே வைத்துக்கொள்ளடி...
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாளே !
இவையெல்லாம் தருவாயடி !
இன்று நீ பிறந்த திருவாடிப்பூரம் !
தகுதியில்லை என்றாலும்,
உன்னிடமுள்ள உரிமையில் கேட்டுவிட்டேன் !
ஆகையால்தருவாயடி !
மன்னித்து அருள்வாயடி !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக