ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஜூலை, 2017

கருடா சௌக்கியமா !!!

கருடா சௌக்கியமா !!!

கஷ்யபரின்
தவப்புதல்வா...
கருடா சௌக்கியமா !!!

வினதையின்
கடைக்குட்டியே...
கருடா சௌக்கியமா !!!

அருணனின்
சகோதரனே !
கருடா சௌக்கியமா !!!

அமிர்த கலசத்தை
கொண்டவனே !
கருடா சௌக்கியமா !!!

வினதையின் அடிமைத்தனத்தை மாற்றினவனே !
கருடா சௌக்கியமா !!!

நாரணனுக்கும் வரம்
தந்தவனே !
கருடா சௌக்கியமா !!!

நாரணனிடம் வரம்
பெற்றவனே !
கருடா சௌக்கியமா !!!

நாரணனின் கொடியில்
ஜொலிப்பவனே !
கருடா சௌக்கியமா !!!

கண்ணனை முதுகில்
சுமப்பவனே !
கருடா சௌக்கியமா !!!

ருக்மிணிக்காக தூது
போனவனே !
கருடா சௌக்கியமா !!!

பகவானுக்காக சுமுகனை
சுமப்பவனே !
கருடா சௌக்கியமா !!!

வேதமே சிறகுகளாய்
கொண்டவனே !
கருடா சௌக்கியமா !!!

வானமாமலையில்
தவம் செய்தவனே !
கருடா சௌக்கியமா !!!

திருநறையூரின்
கல் நாயகனே !
கருடா சௌக்கியமா !!!

ஸ்ரீரங்கத்தின்
மிகப்பெரியோனே !
கருடா சௌக்கியமா !!!

நிகமாந்த மஹாதேசிகருக்கு
ஹயக்ரிவரை தந்தவனே !
கருடா சௌக்கியமா !!!

நான் உன்னை
இத்தனை முறை கேட்டேனே...
சௌக்கியமா என்று...?
நீ என்னைக் கேட்டாயா ?!?

கேள் ! சொல்கிறேன் !
கேட்காமலும் சொல்லுவேன் !

ஏதோ பூமிக்குப் பாரமாய் இருக்கிறேன் !

உன் பலமோ பெரிது !
என் மனமோ சிறிது !
உன் அலகால் என்னைத் தூக்கி,
வைகுந்தத்தில் போட்டுவிடு !

இதுவே நான் வைகுந்தம் அடைய சுலபமான வழி !

நீ என்னை
வைகுந்தத்தில் போட்டால்,
உனக்குத்தான் பெருமை !!!

ஏனென்றால் உன் பலம், சக்தி வைகுந்தமே உணரும் !!!

இன்று உன் பிறந்தநாள் !
சீக்கிரம் என்னை வைகுந்தத்தில் போடு !

கர்மாவும் செய்யாமல்,
ஞானமும் இல்லாமல்,
பக்தியும் பண்ணாமல்,
வெறுமனே இருக்கும்
இந்த ஜீவனை உடனே
வைகுந்தத்தில் சேர்த்து,
உன் பிறந்தநாளில்,
பெருமை தேடிக்கொள் !!!

கருடா சௌக்கியமா !!!
சொல்லிவிட்டேன்...
இனி உன் பாடு...

Read more...

நீயும் ஆகலாம் கலாம் !

அப்துல் கலாம்...

லட்சியத்தில்
திடமிருந்தால்,
உலகமே உன்னை
திரும்பிப் பார்க் *கலாம்*
என்று வாழ்ந்தாரே !

உண்மையாய் உழைத்தால்,
நீ ஜனாதிபதி
மாளிகையில்
தங் *கலாம்*
என்று காட்டினாரே !

தேசத்திற்காய் சிந்தித்தால்,
எல்லோர்
மனங்களிலும்
தங் *கலாம்*
என்று நிரூபித்தாரே !

செய்தித்தாள் விற்று
படித்தாலும்,
கனவை நினைவாக்க
முயன்றால்
அணு விஞ்ஞானி
ஆ *கலாம்* என்றே
சொல்லித்தந்தாரே !

உன் வேலையை
நீ ஒழுங்காக செய்தால்,
இந்த தேசமே உன்னை
வணங் *கலாம்*
என்று வாழ்கின்றாரே !

பிறந்த மதம் எதுவாயினும்,
மற்றவரை மதித்து
நடந்தால், நீ
தெய்வத்தை
அனுபவிக் *கலாம்*
என்றே புரியவைத்தாரே !

அதனால் நீயும்
ஆகலாம் *கலாம்* !

Read more...

வியாழன், 27 ஜூலை, 2017

நீ பிறந்த திருவாடிப்பூரம் !

தூது சொல்லடி !
என்னை உன் கிளியாக்கி,
தூது சொல்லடி...
ரங்கனின் உயர் கன்னி ஆண்டாளே !

காதல் சொல்லடி !
என்னை உன் மாலையாக்கி,
காதல் சொல்லடி...
சூடிக் கொடுத்த சுடர்கொடியே !

ஆசை சொல்லடி !
என்னை உன் ஆடையாக்கி,
ஆசை சொல்லடி...
அஞ்சுக்குடிக்கொரு சந்ததியானவளே !

பாசுரம் சொல்லடி !
என்னை உன் தோழியாக்கி,
பாசுரம் சொல்லடி...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையே !

கண்ணாடி காணடி !
என்னை உன் கண் மையாயிட்டு,
கண்ணாடி காணடி...
பிஞ்சாய் பழுத்தவளே !

புலம்பல் செய்யடி !
என்னை உன் மூக்குத்தியாக்கி,
புலம்பல் செய்யடி...
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாளே !

கைத்தலம் பற்றடி !
என்னை உன்கை மருதாணியாக்கி,
கைத்தலம் பற்றடி...
திருப்பாவை பாடிய செல்வியே !

அம்மி மிதிப்பாயடி !
என்னை உன் பாத மெட்டியாக்கி,
அம்மி மிதிப்பாயடி...
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாளே !

அழைத்துச் செல்லடி !
என்னை உன் கோபாலசுந்தரியாக்கி,
அழைத்துச் செல்லடி...
ஸ்ரீவில்லிபுத்தூர் நாயகியே !

உன்னிடமே வைத்துக்கொள்ளடி !
என்னை உன் திருமுலையாக்கி,
உன்னிடமே வைத்துக்கொள்ளடி...
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாளே !

இவையெல்லாம் தருவாயடி !
இன்று நீ பிறந்த திருவாடிப்பூரம் !
தகுதியில்லை என்றாலும்,
உன்னிடமுள்ள உரிமையில் கேட்டுவிட்டேன் !
ஆகையால்தருவாயடி !
மன்னித்து அருள்வாயடி !

Read more...

வியாழன், 13 ஜூலை, 2017

இனி ஒரு விதி செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
நம் மக்களை தீவிரவாதிகள் தாக்காமல் இருக்க
இன்று புதிய பிரார்த்தனை செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
தீவிரவாதிகள் எங்கும் தீவிரவாதம் செய்யாமலிருக்க
இன்று நாம் சிரத்தையாக நாம ஜபம் செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
உலகின் எந்த மூலையிலும்
தீவிரவாதிகள் தாக்காமலிருக்க
இன்று நாம் திடமாக பக்தி செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
உலகிலுள்ள தீவிரவாத
அமைப்புகள் அழிந்துபோக,
இன்று நாம் பகவானிடம் சரணாகதி செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
அனைத்து தீவிரவாதிகளின் மனமும் நல்வழி செல்ல,
இன்று நாம் ஒற்றுமையாக, பஜனை செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
வரும் தலைமுறைக்கு
தீவிரவாதம் இல்லாத உலகைத் தர,
இன்று நாம் புதிய சங்கல்பம் செய்வோம் !

*இனி ஒரு விதி செய்வோம் !*
நம் மனம் மாறினால்,
எல்லாம் மாறும் !
இன்று முதல் தீவிரவாதம் இல்லா உலகம் செய்ய மனம் கொள்வோம் !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP