ஆயிரம் ஆயிரமாய் !
என்ன சொல்வேன் !
ஆயிரம் பொய்கள் வாயினிலே !
ஆயிரம் எண்ணங்கள் மனதினிலே !
ஆயிரம் யோசனைகள் வாழ்வினிலே !
ஆயிரம் பயங்கள் சிந்தையிலே !
ஆயிரம் குழப்பங்கள் புத்தியிலே !
ஆயிரம் ஆசைகள் ரகசியத்திலே !
ஆயிரம் வியாதிகள் உடலினிலே !
ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளிலே !
ஆயிரம் ஏமாற்றங்கள் முயற்சிகளிலே !
ஆயிரம் தோல்விகள் செயல்களிலே !
ஆயிரம் வெறுப்புகள் மனிதரிடத்திலே !
ஆயிரம் அழுகைகள் கண்களிலே !
ஆயிரம் கெட்ட வார்த்தைகள் நாவினிலே !
ஆயிரம் உளரல்கள் பேச்சினிலே !
ஆயிரம் தவறுகள் வார்த்தைகளிலே !
ஆயிரம் பாவங்கள் கர்மாவிலே !
ஆயிரம் பெருமைகள் கடமைகளிலே !
ஆயிரம் எதிர்பார்ப்புகள் உலகினிலே !
ஆயிரம் சுவைகள் உணவினிலே !
ஆயிரம் வண்ணங்கள் இயற்கையிலே !
ஆயிரம் முனகல்கள் உதட்டினிலே !
ஆயிரம் அழகுகள் அண்டத்திலே !
ஆயிரம் ஆயிரமாய் இன்னும் !
இத்தனை ஆயிரம் தெரிந்த எனக்கு,
உன்னை துதிக்க ஆயிரம் நாமம்,
சொல்லவரவில்லையே !
உன் பக்தன் பீஷ்மரே,
அதை சொன்னார் உன்னிடம் !
க்ருஷ்ணா !
இனி பீஷ்மர் சொன்ன ஆயிரம் போதும் !
என்னைக் காக்க இந்த ஆயிரம் போதும் !
எப்போதும் இந்த ஆயிரம் போதும் !
என்னிடமுள்ள எல்லா ஆயிரமும் போகட்டும் !
பீஷ்மர் சொன்ன ஆயிரம் நாமம் வரட்டும் !
கண்ணா !
ஆயிரம் ஆயிரமாய் உன்னைப் பார்க்க ஆசை !
நான் பீஷ்மரில்லை !
ஆனால் அவர் சொன்ன ஆயிரம் நாமம் சொல்லி, நிச்சயமாக உன்னை ஆயிரம் கண்ணனாய் பார்ப்பேன் !
ஆயிரம் பிறவிகள் எடுத்தாவது,
ஆயிரம் நாமங்கள் சொல்லி,
ஆயிரம் கண்ணனைப் பார்க்க,
பீஷ்மா நீர் ஆசி கூறும் !
பீஷ்மா ! உமக்கு ஆயிரம் வந்தனங்கள் !
பீஷ்மா ! உமக்கு ஆயிரம் முத்தங்கள் !
பீஷ்மா ! ஆயிரம் அம்பில் படுத்து,
ஆயிரம் நாமம் சொல்லி,
ஆயிரம் கண்ணனைக் கண்டவரே !
என்னையும் ஆயிரம் நாமம் புலம்ப வையும் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக