ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 டிசம்பர், 2017

640. மார்கழியே நீதானடி !

மார்கழி வந்ததோ !!!
மதி நிறைந்ததோ !!!

நீராட வந்தாயோ !!!
நீராட்ட வந்தாயோ !!!

சீர் மல்கியதோ !!!
ஆய்பாடி சிறந்ததோ !!!

கூர்வேல் நந்தகோபனோ !!!
ஏரார்ந்த கண்ணி யசோதையோ !!!

கார்மேனி செங்கண்ணனோ !!!
கதிர்மதியம் முகத்தனனோ !!!

நாராயணனும் நமக்கோ !!!
பறையும் நமக்கோ !!!

பாரோர் புகழ்வனரோ !!!
படிந்தே பாடுவோமோ !!!

ஆண்டாளும் வந்தாயே !!!
ஆளவே வந்தாயே !!

ஆட்கொள்ள வந்தாயே !!!
ஆடிப்பூரத்தில் வந்தாயே !!!

பூமகளாய் வந்தாயே !!!
பூவுலகிற்காய் வந்தாயே !!!

கலியுகத்தில் வந்தாயே !!!
கவலை தீர்க்க வந்தாயே !!!

மார்கழியே நீதானடி !!!
மாதவனும் உனக்காகதானடி !!!

மந்திரமே திருப்பாவையடி !!!
மகிழ்ச்சியும் தந்ததடி !!!

சோம்பேறிகள் நாங்களடி !!!
சுய சிந்தனை இல்லையடி !!!

கோதையே உன் திருவடியே....
கதியெனவே வந்தோமடி...

உன்னிடமே இருக்கவேண்டுமடி...
உன் கை கிளியாய் ஏற்பாயடி !!!

Read more...

திங்கள், 11 டிசம்பர், 2017

ரௌத்திரக்கவி !

எங்கள் முண்டாசு கவிஞன் !

வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

தாடா காலனே !
எம்மை எடுத்துக்கொள் !

எம் முண்டாசு கவியை மீண்டும் தாடா !

இங்கே மொழிப்பற்று போதவில்லை !
இங்கே தேசப்பற்று பத்தவில்லை !
இங்கே தெய்வப்பற்று சரியாயில்லை !

வேண்டும் !
பாரதி வேண்டும் !
மீண்டும் வேண்டும் !

அன்று இதே நாளில்
எட்டயபுரத்தில்
பிறந்தவன்...
இன்று மீண்டும் இங்கே பிறக்கவேண்டும் !

வா...பாரதி...வா...
நீ அமரகவி...
இன்னும் பாடு...

எங்களை உயிர்ப்பிக்க
உன் தமிழைத் தவிர
எதற்கும் பலமில்லை !

போதாதடா முண்டாசுக்கவியே !
எங்களுக்கு சாமர்த்தியம் போதாதடா !

ரௌத்திரம் மறந்தோம் !
அச்சம் வளர்த்தோம் !
காதல் மறந்தோம் !
காமம் கற்றோம் !
கடவுள் மறந்தோம் !
ஆனந்தம் தொலைத்தோம் !
காணி நிலம் மறந்தோம் !
பணத்தில் வீழ்ந்தோம் !
கடமை மறந்தோம் !
கடனாளியாய் ஆனோம் !
பாசம் மறந்தோம் !
பகைமை கொண்டோம் !
தேசம் மறந்தோம் !
அடையாளம் தொலைத்தோம் !
காக்கைக் குருவி மறந்தோம் !
காலை தூங்கி வழிந்தோம் !
ஓடி விளையாட மறந்தோம் !
ஒடுங்கிப் போனோம் !

மாக்களாய் ஆன
எம்மை
மக்களாய் ஆக்க
உன்னால் மட்டுமே முடியுமடா
முறுக்கு மீசை கவிஞா !

நல்லதோர் வீணை செய்தாள் சிவசக்தி !
அதை நலம் தர
மீட்டுபவன் நீயன்றோ !

காக்கைச் சிறகினிலே நந்தலாலாவை காட்டியவனே !
கிளியின் வண்ணத்தை
சொல்ல வருவாயடா !

வாடா !
ரௌத்திரக் கவியே...

இது உன் தேசமடா !
இது உன் இனமடா !

இது உன் கடமையடா !

இனி பொறுப்பதில்லை !!

Read more...

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

638. தமிழ் தலைவன் !

எங்கள் தமிழ் தலைவன்,
அன்பால் நாரணனை
அனுபவித்தவன்,
வந்துதித்த
ஐப்பசி அவிட்ட நாள் இன்று !

நாங்கள் கருப்பையில்
மீண்டும் பிறவாதிருக்க,
திருக்கடல் மல்லையில்,
ஞானத் தமிழன்
உதித்த நாள் இன்று !

அன்பையே அகலாய்,
ஆர்வமே நெய்யாய்,
நாராயணனுக்கு
ஞான விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

திருக்கோவலூரில்
இடைக்கழியில்
பொய்கையாழ்வாரோடு
அமர்ந்த பக்தன்
உதித்த நாள் இன்று !

மூவரில் ஒருவராய்,
மூவரில் நடுவராய்,
முதல்வனைக் கண்டு,
அன்பாய் விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

ஐம்பூதங்களை ஆளும்
ஐம்புலன்களை ஆளும்
மஹத்பூதமான நாரணனை
அனுபவித்த பூதத்தாழ்வார்
உதித்த நாள் இன்று !

திருக்கடல்மல்லை
பக்த சிகாமணியே !
காம பூதமாய்,
கோப பூதமாய்,
அஹங்கார பூதமாய்,
ஆசை பூதமாய்,
அலையும் என்னைத் திருத்தி
ஸ்தல சயனத்தான்,
திருவடியில் இப்போதே சேர்த்து
நீர் பூதத்தாழ்வார்
என்பதை நிரூபித்து விடுங்கள் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

சனி, 28 அக்டோபர், 2017

கோபாஷ்டமி !!!

_638. கோபாஷ்டமி !_

கன்றுக்குட்டிகளை மேய்த்த "வத்சபாலன்" ஆன கண்ணன் மாடுகளை மேய்க்க ஆரம்பித்து "கோபாலன்" ஆன நாளே கோபாஷ்டமி !

கோவர்த்தன மலையைத்
தன் பிஞ்சுக் கையால்,
7 நாள் தூக்கிவைத்திருந்த,
கண்ணன் அம்மலையை கீழே
வைத்த நாளே கோபாஷ்டமி !

ஏழு நாளாக ஒன்றும்
சாப்பிடாமல் இருந்த
கண்ணனுக்கு கோபிகைகள்
56 விதமாக நிவேதனம்
செய்த நாளே கோபாஷ்டமி !

மழையைப் பொழிந்து
விருந்தாவனத்தை அழிக்க
நினைத்த இந்திரன்
கர்வமொழிந்து கண்ணனை சரணடைந்த நாளே கோபாஷ்டமி !

ஆகாச கங்கை ஜலத்தாலும்,
காமதேனுவின் பாலாலும்,
கண்ணனுக்கு அபிஷேகம் செய்து,
கோவிந்தன் என தேவர்கள் கொண்டாடினே நாளே கோபாஷ்டமி !

கண்ணனுக்கு அபிஷேகம் செய்த பாலும் ஆகாச கங்கா ஜலமும்
ஒன்றாய் சேர்ந்து
கோவிந்த குண்ட் (குளம்)
ஆன நாளே கோபாஷ்டமி !

கண்ணன் ஸ்வயம்
நாராயணனின் அவதாரம் என்று
கர்க்க முனிவர் சொன்ன
ரஹஸ்யத்தை நந்தகோபர்
எல்லோருக்கும் சொன்ன நாளே
கோபாஷ்டமி !

கண்ணனும் கோபர்களும்,
கோபிகைகளும் ஆசையாய்,
கோமாதாக்களுக்கு
பூஜை செய்த நாளே கோபஷ்டமி !

கோமாதாக்களுக்கு
இந்திரன் கண்ணனே
என்று கோவிந்தா கோவிந்தா என்று காமதேனு கூவி
அழைத்த நாளே கோபாஷ்டமி !

கோமாதாவைக் கொண்டாடி,
ஆசையாய் வலம் வந்து,
கோமாதாவிற்கு ஆகாரம் தந்து,
கோவிந்த நாமம் சொல்லி
பூஜிக்க வேண்டிய
நாளே கோபாஷ்டமி !

கோமாதாவை பூஜிப்போம் !
கோபாலனைக் கொண்டாடுவோம் !
கோபாஷ்டமியைக் கொண்டாடுவோம் !

© குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🍃 *ஆனந்தவேதம்* 🌱🖋

Read more...

வெள்ளி, 27 அக்டோபர், 2017

வேட்டையாடு பத்மநாபா !!!

_*637. வேட்டையாடு பத்மநாபா !*_

வேட்டையாடு பத்மநாபா !
இந்த தேசத்தைத் தவறாய் பேசுபவரின் குழம்பிய மனதை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
இந்து தர்மத்தை கேவலப்படுத்துபவரின் கெட்ட புத்தியை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன் தாசர்களைத்
தப்பாய் பேசுபவரின்
அகம்பாவத்தை
வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன் சொத்தைக்
கொள்ளையடிக்க
ஆசைப்படுபவரின்
பணத்தாசையை
வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன்னுடைய கேரளத்தில்,
நிம்மதியை குலைப்பவரின்
திமிரை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் அசிரத்தையை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் தற்பெருமையை
வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் காமத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் கோபத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் பொறாமையை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் வெறுப்பை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் குழப்பத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் அகம்பாவத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் முட்டாள்தனத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் வேற்றுமைகளை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் சோம்பேறித்தனத்தை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் பாவங்களை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
எங்கள் கர்மவினைகளை வேட்டையாடு !

வேட்டையாடு பத்மநாபா !
உன்னைத் தவிர இவைகளை வேட்டையாட வேறு யாருமில்லை !

வேட்டையாடு பத்மநாபா !
வேட்டையாடி
காப்பாய் தேவா !

பத்மநாபா !
உன் திருவடிகளே சரணம் என்று காத்திருக்கும் இந்த அடிமையின் பிரிவுப் புலம்பலைக் கேட்டு, வேகமாய் வந்து இந்த விரஹத்தையும் வேட்டையாடு !!!

காத்திருக்கிறேன் !
உன் கூர்விழி என்னும் வில்லிலிருந்து... வேகமாய் வரும் கருணை என்னும் அன்பிற்காக...

©குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🍃 *ஆனந்தவேதம்* 🌱🖋

Read more...

புதன், 25 அக்டோபர், 2017

மாமுனியோ !

_636. மாமுனியே !!!_

ஆழ்வார் திருநகரி,
மக்களை நலியும் கலியை நசிக்க
பொலிக பொலிக பொலிகவென்று தந்த அருந்தவ மாமுனியோ !

ஆசார்யன் திருவாய்மொழிப்பிள்ளையின் உள்ளமறிந்து,
உன்னத ரத்னமாய் பேசும் அன்பான சிஷ்ய மாமுனியோ !

பெரியாழ்வாரின் திருமொழிக்கு,
பெரியவாச்சான் பிள்ளையைப் போல் வியாக்யானம் சொன்ன தமிழ்தாயின்
திவ்யமான மாமுனியோ !

அழகிய மணவாளனான
நம்பெருமாள் உகக்க
ஈட்டிற்கு ஈடு இணையில்லா விளக்கம் சொன்ன அழகிய மணவாள ஜீயரோ !

ஸ்ரீரங்கராஜனும் தன் குருவாய் ஏற்று "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" எனக் கொண்டாடின ஆசார்ய மாமுனியோ !

விரோதிகள் குடிலுக்கு
தீ வைக்க அனந்தனாய்
வெளிவந்து தான்
அரங்கனின் படுக்கை
என நிரூபித்த மாமுனியோ !

அரங்கனின் கைங்கரியத்திற்கு
இடையூறாக இருப்பதால்
குடும்ப வாழ்வை துச்சமென
துறந்த மாமுனியோ !

புளிய மரங்களுக்கும்,
தன் தவவலிமையால்,
உடனேயே மோக்ஷம்
தந்த அற்புத மாமுனியோ !

நம் ராமானுஜரின்,
திருவடியே கதியென,
வாழ்ந்து ஆர்த்திப் பிரபந்தம் சொல்லிப்
புலம்பிய மாமுனியோ !

இன்னும் என்னவெல்லாம் சொல்ல...
சொல்ல என்னால் ஆகுமோ...
சொன்னால் யுகங்களும் போதுமோ...
பெரிய ஜீயரின் பெருமையை,
இந்த சிறியன் சொல்லலாமோ...

அதனால்...
அடியார்கள் வாழ,
அரங்கநகர் வாழ,
எங்கள் கலிதீர
வந்த மாமுனியே...
மணவாள மாமுனியே...
வரவர முனியே...
சைலேச தயா பாத்ர முனியே...
ஸ்ரீரங்கராஜ குரு முனியே...
இன்னும் பல்லாயிரம் நூற்றாண்டு இரும்....

©குருஜீ கோபாலவல்லிதாசர்

Read more...

தளபதி

தேவர்களின் "தளபதி" இவன் மட்டுமே !

பக்தர்களின் "தளபதி" இவன் மட்டுமே !

தமிழகத்தின் "தளபதி" இவன் மட்டுமே !

செந்தூரின் "தளபதி" இவன் மட்டுமே !

ஞானத்தின் "தளபதி" இவன் மட்டுமே !

விண்ணவரின் "தளபதி" இவன் மட்டுமே !

மண்ணவரின் "தளபதி" இவன் மட்டுமே !

இந்துக்களின் "தளபதி" இவன் மட்டுமே !

சுனாமியையும் ஜெயித்த
"தளபதி" இவன் மட்டுமே !

சூரனையும் வதைத்த "வெற்றித் தளபதி" இவன் மட்டுமே !

இவன் மட்டுமே எங்கள் "தளபதி" !
இவன் மட்டுமே என்றும் "தளபதி" !
இவன் மட்டுமே மெய்யான "தளபதி" !

இவனே எங்கள் "அழகுத் தளபதி" !
இவனே எங்கள் "இளம் தளபதி!
இவனே எங்கள் "தெய்வத் தளபதி" !

இவனே எங்கள் செந்தூரான் !
இவனே எங்கள் ஸ்கந்தன் !
இவனே எங்கள் முருகன் !
இவனே எங்கள் ஸ்வாமிநாதன் !

இவனே எங்களின்
"நம்பிக்கைத் தளபதி " !
இவனை நம்பினார்
ஒரு நாளும் கெடுவதில்லை !!!

Read more...

திங்கள், 16 அக்டோபர், 2017

பட்டாசு வெடிப்போம் !

பட்டாசு வெடிப்போம் !

தீபாவளியன்று பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் ஒட்டகங்களை
வெட்டி மிருகவதை செய்யவில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள் பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் மதம் மாற்றும் கயமைத்தனம் செய்யவில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்
எங்கள் தீபாவளிக்கு நாங்கள் பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் எந்த நாட்டிலும்
தீவிரவாதம் செய்யவில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் எம் பணத்தில் எங்கள் சிவகாசி பட்டாசுகளை வாங்குகிறோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

எங்கள் பாட்டன், பூட்டன்,
தாத்தன் அப்பன் எல்லாரும்
பட்டாசு வெடித்தார்கள் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம்  !

நாங்கள் ஒரு நாளும்,
எங்கள் மதத்தை யார் மீதும் திணித்ததேயில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் வெளிநாட்டுக்
கம்பெனிகளின் கூலிக்காக விளம்பரங்களில் நடிப்பதில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் இயற்கையின் பாதுகாவலர்கள் !
நாங்கள் காக்கைக்கும் அன்னம் வைப்போம் !
நாங்கள் மரங்களையும் தொழுவோம் !
நாங்கள் பறவைகளையும், மிருகங்களையும், கடவுளின் உருவாய் வணங்குவோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் பட்டாசு வெடித்தோம் !
எம் பிள்ளைகள் பட்டாசு வெடிக்கும் !
எங்கள் வம்சமே பட்டாசு வெடிக்கும் !

எங்கள் மூதாதையர்
சொன்ன விஷயங்களை
நாங்கள் செய்யக்கூடாது
என்று எந்த பொடிப்பயல்களும் சொல்ல அவசியமில்லை !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் எங்கள் ராமனுக்காகவும்,
எங்கள் க்ருஷ்ணனுக்காகவும்,
தீபாவளியைக் கொண்டாடுகிறோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

நாங்கள் ஜனவரி 1க்கு
கும்மாளமடிக்க பட்டாசு வெடிக்கவில்லை !
எங்கள் கலாசார பண்டிகையான
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறோம் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்போம் என்பது,
எங்கள் காக்கைக் குருவிக்கும்,
எங்கள் தெரு நாய்களுக்கும்,
எங்கள் மரம் செடி கொடிகளுக்கும்,
நன்றாகவே தெரியும் !
அதனால் எங்கள் பாரதத்தில்,
எங்கள் தீபாவளிக்கு நாங்கள்
பட்டாசு வெடிப்போம் !

பட்டாசு வெடிப்போம் !
பல்லாயிரமாண்டு பாரம்பரியத்தை நாங்கள்
மாற்றிக்கொள்ள முடியாது !
அவசியமுமில்லை !
பட்டாசு வெடிப்போம் !
பட்டாசு வெடிப்போம் !
பட்டாசு வெடிப்போம் !

க்ருஷ்ண நாமம் சொல்லி பட்டாசு வெடிப்போம் !
ராம நாமம்
சொல்லி பட்டாசு வெடிப்போம் !

இந்து தர்மம் ஜெயிக்க பட்டாசு வெடிப்போம் !
பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சொல்பவரின் முட்டாள்தானம் அழிய,
பட்டாசு வெடிப்போம் !

இனி யாரும் இந்து தர்ம விஷயங்களில் தலையிடக்கூடாதென்று பட்டாசு வெடிப்போம் !

இந்த தேசம் இந்து தேசம் என்று சொல்லிச் சொல்லி பட்டாசு வெடிப்போம் !

இனி மூடர்கள் வாய் திறவாதிருக்க
"வந்தே மாதரம்",
"ஜெய் ஹிந்த்" என்று சொல்லிச் சொல்லி
பட்டாசு வெடிப்போம் !!!

Read more...

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

633. ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி

✍🏼🍃 *ஆனந்தவேதம்*🌱🖋

*_ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி !_*

புரட்டாசி திருவோணம், ஏற்றம் பெற்ற நாளோ இன்று !!!

மலையப்பன் திருமணி, புவியில்
வந்துதித்த நாளோ இன்று !!!

யதிராஜன் ராமானுஜர், மீண்டும்
வையத்தில் வந்த நாளோ இன்று !!!

விளக்கொளி பெருமாள் ஒளி
ஜொலித்த நாளோ இன்று !!!

வரதராஜனின் அருள், உலகிற்கு
வரமாய் வந்த நாளோ இன்று !!!

அரங்கனின் பாதுகைகளுக்கு
ஆசி கிடைத்த நாளோ இன்று !!!

ஹயக்ரீவனின் தாபமெல்லாம்
தீர்ந்த நாளோ இன்று !!!

கருடாழ்வாரின் மகத்துவம் பாரில்
பரிமளித்த நாளோ இன்று !!!

தேவநாதனின் தேவையெல்லாம்
பூர்த்தியான நாளோ இன்று !!!

ஆழ்வார்களும் ஆசார்யர்களும்,
ஆனந்தித்த நாளோ இன்று !!!

சம்ஸ்க்ருதமும், தமிழும்
குதூகலித்த நாளோ இன்று !!!

பெருந்தேவியின் பாக்கியம்
அவதரித்த நாளோ இன்று !!!

நம்பெருமாளின் நம்பிக்கை,
விருத்தியான நாளோ இன்று !!!

நரசிம்மனின் ஆனந்தம்
எல்லை கடந்த நாளோ இன்று !!!

பக்தி ஞான வைராக்கியம்,
வாழ்வு பெற்ற நாளோ இன்று !!!

பூமாதா பூரணமாய் புளகாங்கிதம்
பெற்ற நாளோ இன்று !!!

சம்சாரிகளுக்கெல்லாம் மோக்ஷம்
தீர்மானமான நாளோ இன்று !!!

நம் கொங்கில்பிராட்டி சூசகமாய்
சொன்ன நாளோ இன்று !!!

நமக்காக நிகமாந்த மஹாதேசிகன்
அவதரித்த நாளோ இன்று !!!

வைகுந்த நீள் வாசல் அடையா
நெடுங்கதவாய் ஆன நாளோ இன்று !!!

விசிஷ்டாத்வைதம் வீறு பெற்று
பேறு அடைந்த நாளோ இன்று !!!

தூப்புல் அக்ரஹாரம் குலமணியை
அடைந்த நாளோ இன்று !!!

நீசனான அடியேனும் கடைத்தேற,
ஸ்ரீவைஷ்ணவ சிகாமணி வந்த நாளோ இன்று !!!

இன்றே தான் !
பல் கலையோருக்கும்,
பொதுவாய் வேதாந்தமே,
தேசிகராய் வந்த நாளே இன்று !!!

©குருஜீ கோபாலவல்லிதாசர்

✍🏼🌱 *ஆனந்தவேதம்* 🍃🖋

Read more...

வியாழன், 7 செப்டம்பர், 2017

வரும்...போகும்...

காரணம் எதுவாயினும்
தற்கொலை தவறே !

தற்கொலை
தியாகமல்ல !

தற்கொலை
தீர்வல்ல !

தற்கொலை
அறிவு சார்ந்ததல்ல !

தற்கொலை
நியாயமல்ல !

யார் செய்தாலும்,
தற்கொலை ஒரு
முட்டாள்தனமே !

எதற்காக தற்கொலை
செய்துகொண்டாலும்,
அது பைத்தியக்காரத்தனமே !

படிக்காதவர் செய்தாலும்,
படித்தவர் செய்தாலும்,
தற்கொலை அசிங்கமே !

படிப்பிற்காகத் தூக்கிட்டு உயிரை விட்டாலும்...
இனத்திற்காக தீக்குளித்து உயிரை விட்டாலும்...
மொழிக்காக
விஷமறிந்து உயிரை விட்டாலும்,
அவமானத்திற்காக கீழே குதித்து உயிரை விட்டாலும்,
காதலுக்காக ஜோடியாய் கடலில் வீழ்ந்தாலும்,
பரீட்சையில் தோல்விக்காக கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாலும்...
தற்கொலை மிகக்கேவலமான செயலே...
கொடுமையான மனோவியாதியே !

இதைவிடக் கொடுமை...

தற்கொலை செய்து கொண்டவரை தியாகியாய் பேசுவதே !
அவர்களை எதிர்கால
சந்ததிக்கான விதையாய் கொண்டாடுவதே !

இங்கே தற்கொலைகள் செய்துகொள்பவர்களை கொண்டாடுவதே பிழைப்பாயிற்றே !!!
என்ன பயங்கரம் இது !!!

நல்லவேளை இன்னும்
இணைய விளையாட்டில் தற்கொலை செய்பவரை வீரராய்
கொண்டாடாதவரை நாம் பாக்கியம் செய்தோம் !!!

அழகான வாழ்க்கைக்கு ஆயிரம் அர்த்தங்கள் !
அந்த வாழ்க்கையில் வாழ
கோடி விஷயங்கள் உண்டு !

ஒரு சில தோல்விகள்...
ஒரு சில ஏமாற்றங்கள்...
ஒரு சில நஷ்டங்கள்...
ஒரு சில அவமானங்கள்...
இவையெல்லாம் வாழ்வில் வரும்...போகும்...

உயிரைவிட உலகில் இவை பெரியதோ ?!?

மெத்தப் படித்த சமுதாயம் என்று
நினைப்பவரெல்லாம்,
தற்கொலையை நியாயப்படுத்துவதே
அபத்தம்...விபரீதம்...

கல்லால் அடித்து விரட்டப்பட்ட நிலையிலும்,
சொறி பிடித்த தெரு நாய்
தற்கொலைக்கு முயலவில்லை !!!

மரங்களை எல்லாம் வெட்டி காட்டை பலைவனமாய் மாற்றிய பின்னும், பறவைகள் தற்கொலையை நினைக்கவில்லை !!!

காட்டிலிருந்து தன் இனத்திடமிருந்து பிரித்து கூண்டில் அடைத்தபோதும், மிருகங்கள் தற்கொலைக்கு யோசிக்கவில்லை !!!

தன்னை அழிக்க உலகமே ஓயாமல் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், கொசுக்கள் கூட தற்கொலைக்கு ஆசைப்படவில்லை !!!

பெற்ற பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் வீசிவிட்ட பிறகும், வயதானவர்கள் தற்கொலைக்கு சிந்திக்கவில்லை !

கைகால் இல்லாதவர்,
கண்ணில்லாதவர்,
விபத்தில் கழுத்திற்கு கீழே உணர்ச்சி இழந்தோர்...
இப்படிப் பலரும் ஏதோ ஒரு நற்செயலை செய்து இங்கே மற்றவருக்காய் வாழ்கின்றனர்...

ஆனால் படித்த முட்டாள்கள் சிலரே தற்கொலை செய்து கொண்டு, வாழ்வை அபத்தமாக்குகின்றனர்...

தற்கொலை செய்துகொள்பவர், தீவிரவாதியை விட பயங்கரமானவர்கள்...

ஹே மானிடா !
தற்கொலை செய்பவரின் முகத்தில் காரி உமிழக் கற்றுக்கொள் !!!
தற்கொலை செய்தவரை அருவருப்பாய் பார்க்க பழகிக்கொள் !!!

அப்போதுதான் நாளைய சமுதாயம் உருப்படும் !!!

Read more...

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கண்ணா ! தூது செல் !

ராதே...
வருவாயா...
உன் தாசி
கெஞ்சுகிறேன் !

ராதே...
தருவாயா...
உன் தாசி
காத்திருக்கிறேன் !

ராதே...
அருள்வாயா...
உன் தாசி
யாசிக்கிறேன் !

ராதே...
உன் தாசியின்
இதயத்தை
உனக்குப் பிடித்த
நிதிவனமாய்
மாற்றிவிடு !

ராதே...
உன் தாசியின்
மனதை
நீயும் கண்ணனும்
விளையாடும்
மெத்தையாய்
மாற்றிவிடு !

ராதே...
உனக்கும்,
உன் கண்ணனுக்கும்,
அந்தரங்க
கைங்கரியம்
செய்ய உன் தாசிக்கு
வாய்ப்பு கொடு !

ராதே...
தகுதியில்லாத
உன் தாசியை
உன் திருவடியில்
என்றுமே
வைத்துக்கொள் !

க்ருஷ்ணா !
உன்னிடம்
கெஞ்சுகிறேன் !
எனக்காக
ராதிகாவிடம்
தூது செல் !

என் மனதை
உன் ராணியிடம்
சொல் !

என் தேவையை
உன் அழகியிடம்
சொல் !

என் தாபத்தை
உன் செல்லத்திடம்
சொல் !

என் அவசரத்தை
உன் தேவதையிடம்
சொல் !

காத்திருக்கிறேன்
கண்ணா !
உன் காதலியின்
ஒரு வார்த்தைக்காய் !

Read more...

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

யாரோ...இந்த பிள்ளை...

முச்சந்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அரச மரம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

ஆத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குளத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

மஞ்சள் பொடி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

களிமண் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கண் திருஷ்டி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கருப்பு எரும்பு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கன்னி மூலை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அருகம்புல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

எருக்கம்பூ என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

தேங்காய் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மாம்பழம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கொழுக்கட்டை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

சுண்டல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

அப்பம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கரும்பு என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மஹாபாரதம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யானை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சதுர்த்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குடை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மூஞ்சூறு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

பசுஞ்சாணம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

வெள்ளெருக்கு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சுழி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யாரோ !?!
இந்த பிள்ளை
யாரோ !?!

இவரே பிள்ளையாரோ !!!

சங்கடங்கள் நீக்க
சதுர்த்தியில்
வந்த பிள்ளையே !!!

சிவனையும் எதிர்த்து,
தாய் சொல்லைக் காக்க
வந்த பிள்ளையே !!!

அம்மையப்பனே உலகம்
என எல்லோருக்கும் சொல்ல
வந்த பிள்ளையே !

எல்லோருக்கும் பிள்ளையே !!!
சமத்துப்பிள்ளையே !!!
கொழுக்கு மொழுக்கு பிள்ளையே !!!
கொழுக்கட்டை பிள்ளையே !!!

ஊரும் உலகமும்
கொண்டாடும் பிள்ளையே !!!

தொந்திப்பிள்ளையே !!!
தந்தப்பிள்ளையே !
பிள்ளைகள் கொண்டாடும்
பிள்ளையே !!!

வா !
வா !
உனக்காகவே
நாங்கள்
ஆசை ஆசையாய்
காத்திருக்கிறோம் !

அப்பம், பழம், கரும்பு...
கூடவே எங்கள் அன்பும்...
உனக்காகவே....

Read more...

சனி, 19 ஆகஸ்ட், 2017

வாழு ! வாழு ! வாழு !

ஹே மனிதா !!!!

கொஞ்சம் உலகை
ஒழுங்காய் பார் !
நீ பெரியோன்
என்பதை மறந்து,
சீடனாய் உலகைப் பார் !

இருப்பிடத்தை விட்டு,
இடம் பெயர்த்தாலும்,
புதிய இடத்தில்,
இயலாமையால்
புலம்பாமல்,
உறுதியாய் வாழும்
செடிகளைப் பார் !

கடல் கடந்து,
ஒவ்வொரு வருடமும்,
இடம் பெயர்ந்து,
ஆகாயமார்க்கமாய்
பல நாடுகளுக்குச்
சென்று அங்கு வாழ்ந்து,
மீண்டும் தன் குஞ்சுகளோடு,
தன் பழைய இடம் வரும்
பறவைகளைப் பார் !

தாயிடமிருந்து பிரிந்து,
மண்ணில் புதைத்த,
முட்டைகளிலிருந்து,
முட்டி மோதி வெளிவந்து,
கடற்கரை மணலிலிருந்து,
வெளிவந்து கடலுக்கு,
பயப்படாமல் செல்லும்,
ஆமைக்குஞ்சுகளைப் பார் !

ஆழத்தில் மனிதர்
புதைத்த பிறகும் கூட,
தானே மண்ணைக் கிளறி,
தானே உயர்ந்து,
தானே நிமிர்ந்து,
முளை விடும் விதைகளைப் பார் !

பறவைகளின் எச்சங்களில்,
இருந்து வெளிவந்து,
எங்கோ கட்டடத்தின்
மூலையில் விழுந்து,
ஒரு நாள் மழைத்துளியில்,
ஒய்யாரமாய் வளரும்,
சின்னஞ்சிறிய செடிகளைப் பார் !

புயல் காற்றில்,
சரிந்த பின்னும், மனிதர்
மறந்து போன பின்னும்,
புதிய எழுச்சியோடு,
மீண்டும் வான் நோக்கி,
வளரும் மரங்களின்
கிளைகளைப் பார் !

தழுவிக்கொள்ள,
மேலேற்றிவிட ஒரு
கொம்பு இல்லாத போதும்,
மேலே படர எல்லா
வழிகளிலும் ஆசையாய்
முயற்சிக்கும்,
உடலில் பலமில்லா,
ஊக்கத்தில் குறையில்லா,
கொடிகளைப் பார் !

மனிதர்கள் ஆசையாய்,
நடந்து, கையால் கிள்ளி,
கத்தரிக்கோலால்
வெட்டிய பின்னும்,
மீண்டும், மீண்டும்
முயற்சியோடு
துளிர்க்கும் புல்லைப் பார் !

இப்படி இருந்தால்
எனக்குப் பிடிக்கும்,
என்று மனிதர் தன இஷ்டப்படியெல்லாம்,
வெட்டி, வளைத்தாலும்,
புதியதாய் ஒவ்வொரு
நாளும் வாழும்,
க்ரோட்டன் செடிகளைப் பார் !

செடியிலிருந்துப் பறித்து,
பலர் கை மாறி,
நாரில் தொடுத்த பிறகும்,
வாடும் வரை,
ஆனந்தமாய் வாசம்
வீசும் மல்லிகையைப் பார் !

கண்ட இடங்களில்,
கொண்டவர் போட்டுச்
சென்றாலும், கண்டதை
மிதித்தாலும்,
காலுக்கு நன்மை
செய்யும் செருப்பைப் பார் !

யாருமே கவனிக்கவில்லை
என்றாலும், தினமும்,
துடைத்து அழகாய்,
வைக்கா விட்டாலும்,
தன் கடமையை
இருந்த இடத்தில்
இருந்து செய்யும்,
கடிகாரங்களைப் பார் !

உன்னோடு கூடவே,
நீயே கொண்டாடும்,
நீயே அதிசயிக்கும்,
நீயே தூக்கி எறியப்போகும்,
தினமும் தன்
கடமையிலிருந்து தவறா,
உன் கைப்பேசியைப் பார் !

இன்னும் ஓராயிரம்...
இல்லையில்லை...
இன்னும் பலகோடி...

உன்னைச் சுற்றி...
வாழு...வாழு...வாழு...
நிம்மதியாய் வாழு...
புலம்பாமல் வாழு...
ஆனந்தமாய் வாழு...
அழகாய் வாழு...
முயற்சியோடு வாழு...
புதியதாய் வாழு...
உற்சாகமாய் வாழு...
உனக்காக வாழு...
உறுதியாய் வாழு...
என்று கூவிக்கொண்டே
இருக்கும் இந்தக்
கடவுளின் தூதுவர்களைக்
கண் திறந்து பார் !!!

கடவுளின் தரிசனம் புரியும் !
கடவுளின் கோட்பாடு புரியும் !
கடவுளின் ஆசிர்வாதம் புரியும் !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP