திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
தோழியை எல்லே இளங்கிளியே
என்று அன்புடன் எழுப்பியவளே...
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
தோழியை இன்னம் உறங்குதியோ
என உரிமையோடு கேட்டவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
சில்லென்று அழைக்காதே என
தோழியின் பதில் கேட்டவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
வருகிறேன் நங்கைகளே எனும்
தோழியின் மொழியை ரசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
தோழியிடம் உன் கதைகள்
யாவும் நாமறிவோம் என்றவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
உன் வாய் ஜாலம் நன்கறிவோம்
என தோழியைப் பரிகசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
வல்லவர்கள் நீங்களே என தோழி
கூறியதைப் புரிந்து சிரித்தவளே !
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
நானேதான் ஆயிடுக என்ற
தோழியின் மன்னிப்பை ஏற்றவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
முதலில் நீ வெளியில் வா
என தோழியைக் கடிந்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
உனக்கென்ன வேறு வேலை
என்று தோழியை சீண்டியவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
எல்லோரும் வந்தாரோ என்றவளின்
குரலின் நாதத்தை ருசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
வந்தாரை நீ வந்தெண்ணிக்கொள்
என சாதுர்யமாய் உரைத்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
வல்லானை கொன்றானை
வகைவகையாய் பாடினவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
மாற்றாரை மாற்றழித்தவனை,
மனதார வாயாறத் துதித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
மாயனை, நேயனை, ஆயனை,
தூயனை, தமிழால் அழைத்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !
மதியிலாத எமக்காய்,
விதிவலிதான எமக்காய்,
உதித்த உனக்கே நாம்
துதி பாடுவோம் !
ஆடி அடங்கும் முன்
கூடிடு கண்ணனை எனப்
பாடிப் பரவசப்படுத்தும்,
ஆடிப்பூர நாயகியே,
அடி பணிந்தோம் உன்னையே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக