ஏங்கும் மனம் அருள்வாயே !
புழங்கும் தோட்டத்தைப் பார்த்தாயே,
அங்கிருக்கும் குளத்தைப் பார்த்தாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
செங்கழுநீர் மலர்ந்ததைச் சொன்னாயே,
ஆங்கே ஆம்பல் கூம்பினதைச் சொன்னாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
செங்கல் பொடியாய் காவியைக்
கண்டாயே,
சங்கம் ஊதுவாரின் சங்கத்தைக் கண்டாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
தங்கள் கோயிலடைவாரைச்
சொன்னாயே,
பங்கமில்லாத அவர் பல்லைச்
சொன்னாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
மங்காதத் தவத்தைக் கண்டாயே,
உங்களை எழுப்பாமல் தூங்குபவளைக் கண்டாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
தூங்குபவளுக்கு நாணமில்லை என்றாயே,
பொங்கும் நாவுடையாள்
என்றாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
சங்கும் சக்கரமும் அங்கையில் என்றாயே,
தங்கும் திருக்கையன் கண்ணன் என்றாயே,
அங்கையில் கிளி கொண்ட
பைங்கிளியே !
பங்கயக் கண்ணன் காதலைச் சொன்னாயே,
சங்கமாய் பாடலாம் அவனை என்றாயே,
அங்கையில் கிளி கொண்ட பைங்கிளியே !
எங்கும் கண்ணனைக் காணும் பைங்கிளியே !
பொங்கும் பரிவாலே
இங்கே வந்தாயே !
எங்கள் நெஞ்சில்
தங்கி அருளாயே !
பங்கயக் கண்ணனின்
தங்கக் கிளியானவளே !
அங்கையில் நீயே
எங்களைக் கிளியாய் கொள்வாயே !
நீங்கா பக்தியோடு,
மங்கா பணிவோடு,
ரங்கன் நினைவோடு,
சங்கமிக்கும் வரம் தருவாயே !
இங்கும் ரங்கன்,
அங்கும் ரங்கன்,
எங்கும் ரங்கன், என
ஏங்கும் மனம் அருள்வாயே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக