ஹரி சந்தன கல்பவல்லியே !
புள்ளின் வாய்
கீண்ட கண்ணனின்,
கீர்த்தியை பாடின,
ஹரி சந்தன கல்பவல்லியே !
பொல்லா அரக்கனைக்
களைந்த ராமனின்,
கீர்த்தியைப் பாடின,
ஹரி சந்தன கல்பவல்லியே !
கீர்த்தியைப் பாடும்
கிறங்கிய பாவைகளின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
பாவைகள் கூடும்
பாவைக்களத்தின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
வியாழன் உறங்கி,
வெள்ளி எழுந்தக்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
புள்ளும் சிலம்பும்
புனித விடியலின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
சகியின் சிருங்கார
கண் அழகின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
குள்ளக் குளிரக்
குடைந்து நீராடும்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
பள்ளிக் கிடக்கும்
க்ருஷ்ண பாவையின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
கண்ணனைக் கூடும்
நல்ல நாளின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
கள்ளம் தவிர்ந்தால்
உண்டாகும் சங்கமத்தின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
கலந்தால் கிடைக்கும்
கண்ணனின் கலவியின்
கீர்த்தியைப் பாடின
ஹரி சந்தன கல்பவல்லியே !
கள்ளம் தவிர்த்து,
கண்ணனைப் பிடித்து,
காதலை வளர்த்த,
ஹரி சந்தன கல்பவல்லியே !
அரிதான ஹரியை
துரிதமாய் அறிவதே,
அறிவெனச் சொன்ன
ஹரி சந்தன கல்பவல்லியே !
சிறிதும் அறிவிலாத,
சரியான பிரியமிலாத,
அறியும் குறியிலாத,
புரியாத சிறியரான எமக்கும்
ஹரியை பிரியமாய்
உரிமையாய் சொல்லும்
ஹரி சந்தன கல்பவல்லியே !
அரிதான கல்பவல்லியே,
ஹரி தான கல்பவல்லியே,
துரிதமாய் வா !
அறிவைத் தா !
ஹரியைத் தா !
ஹரி சந்தன கல்பவல்லியே !
ஹரி என்றாலே
சரிதானே என்று
அறிந்த உனக்கே
உரியது வந்தனங்களே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக