நீயே போதுமடி பெண்பிள்ளையே !
மாயனை நாங்கள்
தூய மலரிட்டு
தொழச் செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
வடமதுரை மைந்தனை
தூமலர் தூவித்
தொழச் செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
தூய பெருநீர் யமுனையும்
தொழுத தூயவனுக்கு
தூமலர் தூவச்செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
ஆயர்குல அணி விளக்குக்கு
அழகாய் தூமலரை
தூவச்செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
தாயைத் தொழுத
தாமோதரதனைத்
தொழுது தூமலர்
தூவ வைத்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
தூமலர் தூவி
தூயோமாய் தொழுது
தூயவனின் திருநாமத்தை
வாயினால் பாட வைத்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
மனதால் அவனை
நினைக்கத் தெரியாத
எங்களையும் அவனையே
சிந்திக்க வைத்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
தூயவனின் நாமமே
எம் பாவத்தை எரித்து
எம்மை தூய்மையாக்கும்,
என சத்தியம் செய்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
தூயவனின் நினைவே
இனியும் பாவம்
செய்ய விடாமல்
தூய்மையாய் காக்கும்
என துணிவைத் தந்தாயடி
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
தூயவனின் நாமம்
தூயவனை விட
தூய்மையானது எனச்
சொன்ன தூயவளே...
எம்மை தூய்மையாக்க
நீயே போதுமடி...
பெரியாழ்வாரின்
பெண்பிள்ளையே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக