உய்வோமடி நாச்சியார் !
வையத்து வாழ்வு உயர்ந்ததென சொன்னாயடி
நாச்சியார்...
பாற்கடல் பரமனடியை
எம்மையும் பாட வைத்தாயடி
நாச்சியார்...
நெய்யும் பாலும் கண்ணனுக்கே,
நமக்கல்ல என்றாயடி
நாச்சியார்...
கண்ணுக்கு அழகு மையல்ல, கண்ணனே
என புரியவைத்தாயடி
நாச்சியார்...
தலைக்கு அழகு பூவல்ல, கண்ணனின் அபயக்கரமே
என உணர்த்தினாயடி
நாச்சியார்...
செய்யாதன செய்யாதபடி
புத்தியையும், மனதையும்,
உடலையும், இந்திரியங்களையும் திருத்தினாயடி
நாச்சியார்...
தீக்குறளைப் பேசாதபடி நாவையும், மனதையும்,
அடக்கினாயடி
நாச்சியார்...
பக்தருக்கும், முக்தருக்கும், ஆசாரியருக்கும், கைங்கர்யம் செய்ய ஆசை
கூட்டினாயடி
நாச்சியார்...
நீ எம்மிடம் உகந்தால்,
உலகமும், உயிரும், தேவரும், தெய்வமும்,
எல்லாம் உகக்குமடி
நாச்சியார்...
உன்னைக் கொண்டே
நாங்களும் இந்த வையத்தில்
வாழ்ந்து உய்வோமடி
நாச்சியார்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக