நந்தலாலா...நந்தலாலா...
பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா !
பயிரின் வாசமெல்லாம் நந்தலாலா,
உந்தன் இளமை வாசமடா நந்தலாலா !
உயிரின் தேவையெல்லாம் நந்தலாலா,
உந்தன் தரிசனம் தானடா நந்தலாலா !
சூரிய ஒளியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் ஜோதி ரூபமடா நந்தலாலா !
ஏழையின் சிரிப்பிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் கருணை புரியுதடா நந்தலாலா !
மழையின் துளியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் மகிமை தெரியுதடா நந்தலாலா !
தனிமையின் நேரமெல்லாம் நந்தலாலா,
உந்தன் காதல் ருசிக்குதடா நந்தலாலா !
வறுமையின் பிடியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் அரவணைப்பு சிலிர்க்குதடா நந்தலாலா !
குழந்தையின் முத்தத்திலே நந்தலாலா,
உந்தன் ஈரம் உரசுதடா நந்தலாலா !
தென்றல் காற்றினிலே நந்தலாலா,
உந்தன் ஸ்பரிசம் தீண்டுதடா நந்தலாலா !
ஒவ்வொரு விடியலிலும் நந்தலாலா,
உந்தன் ஆசை எழுப்புதடா நந்தலாலா !
ஒவ்வொரு இரவினிலும் நந்தலாலா,
உந்தன் காமம் இனிக்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு நொடிப்பொழுதும் நந்தலாலா,
உந்தன் அக்கறை துடிக்குதடா நந்தலாலா !
வியாதியின் வலியிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் நேசம் மயக்குதடா நந்தலாலா !
வாழ்வின் பயணத்திலே நந்தலாலா,
என்றும் வழித்துணைவன் நீயடா நந்தலாலா !
எந்தன் தவறிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் அன்பு உருக்குதடா நந்தலாலா !
எந்தன் பாவமெல்லாம் நந்தலாலா,
உந்தன் அருளிலே மூழ்குதடா நந்தலாலா !
எந்தன் உளரலெல்லாம் நந்தலாலா,
உன்னால் உயிர் பெற்றதடா நந்தலாலா !
என்னை கொள்ளை கொள்ளடா நந்தலாலா
உன்னை உள்ளபடி தந்துவிடடா நந்தலாலா !
அணுவின் துகளிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் ஆளுமை அதிசயமடா நந்தலாலா !
பெண்மையின் மென்மையெல்லாம் நந்தலாலா,
உந்தன் ஊடுருவல் உசுப்புதடா நந்தலாலா !
ஆண்மையின் வீரியத்தில் நந்தலாலா,
உந்தன் புத்துயிர் துளிர்க்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு பிரசவத்திலும் நந்தலாலா,
உந்தன் தாய்மை விளங்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு பிடி உணவினிலும் நந்தலாலா,
உந்தன் உரிமை அதிகரிக்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு தோல்வியுமே நந்தலாலா,
உந்தன் தோளில் சாய்க்குதடா நந்தலாலா !
குருவின் திருவருளே நந்தலாலா,
என்னை உன் காலில் கிடத்துதடா நந்தலாலா !
இனி வாழ்வின் பொருளெல்லாம் நந்தலாலா,
உந்தன் இச்சைப்படியே
நந்தலாலா !
ஒவ்வொரு ருசியிலுமே நந்தலாலா,
உந்தன் ரசமே நிறைந்திருக்குதடா நந்தலாலா !!!
ஒவ்வொரு குழப்பத்திலும் நந்தலாலா,
உந்தன் தீர்மானமே தீர்வாகுதடா நந்தலாலா !!!
ஒவ்வொரு வெற்றியிலும் நந்தலாலா,
உந்தன் ரகசியமே ஜெயிக்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு அழுகையிலும் நந்தலாலா,
உந்தன் ஆசி கூடுதடா நந்தலாலா !
ஒவ்வொரு செயலிலுமே நந்தலாலா,
உந்தன் காரணமே காரியமடா நந்தலாலா !
விதைத்த விதைதனிலே நந்தலாலா,
உந்தன் புதுமை சித்திக்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு யோசனையிலும் நந்தலாலா,
உந்தன் அறிவே துணையாகுதடா நந்தலாலா !
ஒவ்வொரு பிழையினிலும் நந்தலாலா,
உந்தன் திறமை திருத்துதடா நந்தலாலா !
ஒவ்வொரு களவினிலும் நந்தலாலா,
உந்தன் அதிகாரம் அடக்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு பொய்யிலுமே
நந்தலாலா,
உந்தன் மெய்மை அடக்குதடா நந்தலாலா !
ஒவ்வொரு அழிவினுலும் நந்தலாலா,
உந்தன் பலமே காக்குதடா நந்தலாலா !
உலகின் ஓட்டமெல்லாம் நந்தலாலா,
உன்னிடமே ஒடுங்குதடா நந்தலாலா !
மனிதர் தேடலெல்லாம் நந்தலாலா,
உனையன்றி யாரறிவார்
நந்தலாலா !
முடிந்தவரை சொல்லிவிட்டேன் நந்தலாலா,
முடிவுரை நீயல்லவோ நந்தலா !
ஒவ்வொரு முயற்சியிலும் நந்தலாலா,
உந்தன் திருவருளே விளைகிறது நந்தலாலா !
என்னிடம் ஏதுமில்லை நந்தலாலா,
உன்னிடம் குறையுமில்லை நந்தலாலா !
எல்லாம் உன் வசமே நந்தலாலா,
எனையும் வசீகரித்தாய் நந்தலாலா !
உள்ளதை தந்துவிட்டேன் நந்தலாலா,
உள்ளத்தையும் கொடுத்துவிட்டேன் நந்தலாலா !
எழுதும் எழுத்திலெல்லாம் நந்தலாலா,
ஆதியான உன் உருவன்றோ நந்தலாலா
மூச்சுக் காற்றிலெல்லாம் நந்தலாலா,
உந்தன் முத்தத்தின் சாரலடா நந்தலாலா !
சொல்ல வார்த்தை இல்லை நந்தலாலா,
சொல்லைக் கடந்த சோதி நீ நந்தலாலா !
அடக்காத ஆசையெல்லாம் நந்தலாலா,
உன் அணைப்பில் அசந்ததடா நந்தலாலா !
கோபாலவல்லியின் காதலெல்லாம் நந்தலாலா,
இந்த கோபாலனுக்கு மட்டுமே நந்தலாலா ...
இப்பாட்டின் வார்த்தையெல்லாம் நந்தலாலா,
உந்தன் பாரதியின் பிச்சையடா நந்தலாலா !
நான் உன் அருகிலில்லை நந்தலாலா,
ஆயினும் நீ ஒதுக்கவில்லை நந்தலாலா !
உறவு புரியவில்லை நந்தலாலா,
உன் நிழலில் என் வாழ்க்கை நந்தலாலா !
ஒன்றும் தெளிவில்லை நந்தலாலா,
உனையன்றி தேவையில்லை நந்தலாலா !
எனக்கு அன்பன் நீயன்றோ நந்தலாலா,
எந்தன் அனுபவமும் நீயல்லவோ நந்தலாலா !
முதலும் நீயன்றோ நந்தலாலா,
முழுதும் நீயன்றோ நந்தலாலா !
ஒவ்வொரு தாகத்திலும் நந்தலாலா,
உன் உணர்வே தாக்கமடா நந்தலாலா !
ஒவ்வொரு முடிவினிலும் நந்தலாலா,
மீண்டும் தொடக்கம் நீயல்லவோ நந்தலாலா !
பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா,
உன்னையே பார்க்க வேண்டுமடா நந்தலாலா !