ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

தீபம் ஏற்று ! ! !

ராதேக்ருஷ்ணா





தீபம் ஏற்று ! ! !


ராதையே அகலாக, குருவே நெய்யாக,
உன்னத ப்ரேமையே திரியாக,
க்ருஷ்ணனே ஜோதியாக
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

இந்து தர்மமே அகலாக, வேதமே நெய்யாக,
ராமாயணமே திரியாக,
 ஸ்ரீமத் பாகவதமே ஜோதியாக
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

வையகமே அகலாக, பாரதமே நெய்யாக,
அமைதியே திரியாக,
உத்தமமான அன்பே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !
 
ஸ்ரீரங்கமே அகலாக, காவேரியே நெய்யாக,
ரங்கநாயகியின் ஆசியே திரியாக,
நம்பெருமாளே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !


திருமலையே அகலாக,
ஆகாச கங்கையே நெய்யாக,
பத்மாவதியின் அருளே திரியாக,
மலையப்பனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

அத்திகிரியே அகலாக, சாலைக் கிணறே நெய்யாக,
பெருந்தேவியின் கருணையே திரியாக,
வரதராஜனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

ருக்குமாயி அகலாக, சந்திர பாகா நெய்யாக,
அபங்கங்களே திரியாக,
பாண்டுரங்கனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

ப்ரும்மமே அகலாக, ஞானமே நெய்யாக,
ஸ்ரீ சங்கர பகவத் பாதரே திரியாக,
ப்ரும்மானந்தமே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

நம்மாழ்வாரே அகலாக, சரணாகதியே நெய்யாக,
திவ்ய ப்ரபந்தங்களே திரியாக,
ஸ்வாமி இராமானுஜரே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !


உடுப்பியே அகலாக, ஸ்ரீ மத்வரே நெய்யாக,
 ஸ்ரீ ராகவேந்திரரே திரியாக,
பால க்ருஷ்ணனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒருதீபம் ஏற்று ! ! !

 ப்ருந்தாவனமே அகலாக, யமுனையே நெய்யாக,
பக்தர்களே திரியாக,
ராச க்ரீடையே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

இத்தனை தீபம் ஏற்றிவிட்டு,
என் அனந்தபுரி தீபம் ஏற்றாமல்
விடமுடியுமா ? ! ?

ஆதிசேஷனே அகலாக, ப்ரும்மதேவரே நெய்யாக,
சிவபெருமானே திரியாக,
என் பத்மநாபனே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒரு தீபம் ஏற்று ! ! !

 
நம்பிக்கையே அகலாக, திடமே நெய்யாக,
பொறுமையே திரியாக,
நாம ஜபமே ஜோதியாக,
இந்த தீபாவளிக்கு ஒருதீபம் ஏற்று ! ! !

இன்னும் இது போல்
கோடி தீபம் ஏற்றுவோம் . . .

நான் ஏற்றும் சில தீபங்களை
உன்னிடம் சொல்லிவிட்டேன் . . 

 இனி உன் இஷ்டப்படியெல்லாம்
வித விதமாய் தீபம் ஏற்றி
இந்த தீபாவளியைக் கொண்டாடு ! ! !


இந்த தீபங்கள் என்றும் அணையாது !
இந்த தீபங்கள் ஏற்றி
நம் வாழ்வில் ஒளியைப் பெறுவோம் ! ! !


எல்லோருக்கும் இந்தத் தீபாவளி
பக்தித் தீபாவளியாக,
ஞான தீபாவளியாக,
வைராக்ய தீபாவளியாக,
தீர்காயுள் தீபாவளியாக,
ஆரோக்கிய தீபாவளியாக,
ஐஸ்வர்ய தீபாவளியாக
அமைய
பகவானும், ஆசார்யர்களும்,
பாகவதர்களும்
பூரணமாய் ஆசீர்வதிப்பார்களாக,,,

நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP