ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

காஞ்சிபுரம் . . .சேவிப்பேன் !

ராதேக்ருஷ்ணா




தரம் பார்த்து வரம் தராமல்,
சிரம் தாழ்ந்து சேவித்தாலே,
வருவோர் போவோர்கெல்லாம் வரம் தரும்
வரதராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

கரம் கூப்பி வருவோருக்கு,
வலக் கரத்தில் வருந்தாதே என்று
எழுதி வைத்து வரம் தரும்
 தேவராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


பெரும் பாரம் சம்சார சாகரம் என்று
வரும் அடியாரின் கடும் துயரம் தீர
ஆர்வமாய் பேரரருள் செய்யும்
பேரரருளாளனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !
 


பெருமையினால் பொறுமையிழந்த மனிதரை
அருள் நிறைந்த பார்வையினால் ஆட்கொள்ளும்
அருமையான பெருந்தேவித் தாயாரின்
தேவப்பெருமாளை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


புத்தியில்லாமல் பணத்தை மட்டுமே நாடி,
நித்தியமும் மரணத்தை அறியா மனிசரை,
அத்திசையிலும் அருகிலிருந்து காக்கும்
அத்திகிரி நாதனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !

உச்சி மீது துயரறு சுடரடியை வைத்து,
கச்சிதமாய் பூந்தோட்டம் சமைத்து,
உசிதமாய் விசிறி வீசிய கச்சி நம்பியின்
கச்சியூரானை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !



கேள்வி கேட்ட ராமானுஜரைக் கொல்ல,

ஆள் கூட்டத்தோடு சென்ற யாதவப்ரகாசனிடமிருந்து,
விந்தியத்தில் வில்லேந்தி வந்து மீட்ட
வேடுவனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


விருப்புற்ற ராமானுஜருக்கு கச்சி நம்பி மூலம்
திருத்தமாய் ஆறு வார்த்தைகளை அருளி,
கருவிலே திருவிலாத நமக்கும் கிருபை செய்யும்
அத்தியூரானை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


திருவரங்க பெருமாளரையரின் திருப்பாவைக்கு மயங்கி,
பெருந்தேவித் தாயாருக்கு தீர்த்தம் தந்த யதிராஜரை,
ஒரு வார்த்தைக்காய் திருவரங்கனுக்குத் தாரை வார்த்த
தியாகத்தின் ராஜனை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


நாற்பது வருடத்திற்கு ஒரு முறை
அற்புதமாய் திருக்குளத்தில் இருந்து
புறப்பட்டு வந்து பக்தருக்கு அருள் பாலிக்கும்
அத்தி மர ப்ரபுவை
காஞ்சிபுரத்தில் சேவித்தேன் ! ! !


 
வரதராஜா . . . பேரருளாளா . . .
அத்தியூரா . . . கச்சியின் பதியே . . .
தேவப்பெருமாளே . . . தேவராஜனே . . .
 பெருந்தேவி நாயகா . . .
யதிராஜரைக் காத்த வில்லியே . . .
ஆளவந்தாருக்கு அருளின அருளாளப் பெருமாளே . .


சேவித்தேன் . . . உன்னை சேவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் அழகை அனுபவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் கருணையைக் குடித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் அருளில் திளைத்தேன் . . .
சேவித்தேன் . . . உன் குழந்தையாய் மாறினேன் . . .
சேவித்தேன் . . . உன் சொத்தாய் ஆனேன் . . .
சேவித்தேன் . . . உன்னை என்னுள் கண்டேன் . . .
சேவித்தேன் . . . உன்னிடம் என்னைக் கொடுத்தேன் !
சேவித்தேன் . . . உன்னையன்றி வேறறியேன் . . .
சேவித்தேன் . . . உன்னை என் சொத்தாய் பாவித்தேன் . . .
சேவித்தேன் . . . உன் பித்தனானேன் . . .
சேவித்தேன் . . . இன்னும் சேவிப்பேன் . . .



உன் இராமானுஜ தாசனாய்
நான் ஆகும் வரை சேவித்துக்கொண்டிருப்பேன் . . .



காத்திருப்பாய் . . .
எனக்கு ஒரு வரம் தர . . .
பார்த்திருப்பாய்  . . .
உன் இராமானுஜ தாசனாய் நான் மாற . . .


Read more...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஸ்ரீரங்கம் . . . அந்தரங்கம்..

ராதேக்ருஷ்ணா




அந்தரங்கத்தில் உள்ள
அழுக்குகள் அறவே நீங்கி,
அந்தரங்கம் திருவரங்கமாக
அந்த ரங்கனிடம் சென்றேன் ! ! !

அந்த ரங்கத்தில் அரங்கனுக்கு
அந்தரங்க கைங்கர்யம் செய்யும்
தானான திருமேனி நம்
ராமானுஜரைக் கண்டேன் ! ! !

அந்தரங்கத்தில் அற்புதமாய்
அந்த ரங்கனை அணு அணுவாய்
ஆசையாய் அனுபவிக்கும்
அரங்கநாயகியைக் கண்டேன் ! ! !


அந்தரங்க அன்புடன் தன்னைத்
தொழுத மண்ணுடை விபீஷணனுக்காய்,
மதில் இலங்கை நோக்கிக் கிடக்கும்
அந்த ரங்கனை ஆசையாய்க் கண்டேன் ! ! !

அந்தரங்கத்தில் தன்னிடம்
தன்னையே பூரணமாய் தந்த
திருப்பாணரை தன்னுள் வைத்த
அந்த ரங்கத்தின் அமுதினைக் கண்டேன் ! ! !

அந்தரங்கமாய் தன்னைக் காதலித்து,
தனக்காய் ஏங்கின ஆண்டாளை,
தன் அந்தரங்கத்தில் அழகாய் கொண்ட
என் அரங்கத்து இன்னமுதனைக் கண்டேன் ! ! !


அந்தரங்கத்தில் அழுது தொழுது
பாடி அலற்றின நம்மாழ்வாரின்
நம்பெருமாளை அந்த ரங்கத்தில்
அதிசயமாய் அர்ச்சாவதரமாய்க் கண்டேன் ! ! !


அந்தரங்கத்தை அப்போதைக்கு இப்போதே
இந்த ரங்கனிடம் சொன்னால் தான்
உண்டென்று சொன்ன பெரியாழ்வாரின்
பெரிய பெருமாளை அந்த ரங்கத்தில் கண்டேன் ! ! !


அந்தரங்கத்தில் இருந்த அந்த ரங்கனை
மறந்து தேவதேவியின் அந்தரங்கத்தில்
தன்னை இழந்த விப்ரநாராயணரைத் 
தன் அந்தரங்கத் தொண்டர் அடிப் பொடியாய்
மாற்றின அந்த ரங்கனைக் கண்டேன் ! ! !




கருவரங்கத்தை மீண்டும் அடையாமலிருக்க,
திருவரங்கமே கதி என்றிருக்க,
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வாரும் அனுபவித்த
அந்த ரங்கனைக் கண்டேன் ! ! !

திருவரங்க யாத்திரை என்று
நித்யம் தன் ராஜ்ஜியத்தில் பறை அறிவித்த
அந்த ரங்கதேசத்தின் தாசன் குலசேகர ராஜனின்
அந்த ரங்கனைக் கண்ணாரக் கண்டேன் ! ! !


  அந்தரங்கத்தில் அந்த ரங்கனின் பாதம்
பிரியாதபடி இருக்க ப்ரார்த்தனை செய்த
திருமழிசை ஆழ்வாரின் ஸ்வாமியை
அந்த ரங்கத்தில் அமைதியாய்க் கண்டேன் ! ! !


அந்த ரங்கத்தில் வானளாவிய மதில்களை
அந்தரங்க கைங்கர்யமாகக் கட்டி, மதில் உமக்கு,
மடல் நறையூராருக்கு என்ற 
திருமங்கை மன்னனின் அந்தரங்க நாயகனை,
அந்த ரங்கனை அந்த ரங்கத்தில் கண்டேன் ! ! !


அந்தரங்கமாய் காவேரி தன் திருக்கையால்,
திருவடிகளை வருட, கருமணியாய்,
கோமளமாய், அமலனாய், அழகனாய்,
முன்னிலும் பின்பழகியவனாய்,
கள்வனாய், அழகிய மணவாளனாய்,
ஆதி பிரானாய், ஆயனாய், கோவலனாய்,
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வனாய்,
அனந்த சயனனாய், இஷ்வாகு குல தனமாய்,
உன் அந்தரங்கம் எனக்குத் தெரியும் என்று
நம்மைப் பார்த்துச் சிரிக்கும் குழந்தையாய்,
அந்த ரங்கத்தில் கிடக்கும்,
அந்த ரங்கனிடம் என் அந்தரங்கம்
தானாய் சரண் புகுந்தது . . .


அந்தரங்கம் இனி அந்த ரங்கனிடம் ! ! !

https://www.facebook.com/media/set/?set=a.10151679774601631.1073741856.668376630&type=1&l=343515e1bb





Read more...

வியாழன், 19 செப்டம்பர், 2013

உறையூர் . . .

ராதேக்ருஷ்ணா




உள்ளத்தே உறையும் மாலை உணர,
கமலவல்லி நாச்சியார் உறையும்
உறையூருக்குப் போனேன் . . .


உள்ளுவார் உள்ளே இருப்பவனை
தன்னுள்ளே அனுபவித்த திருப்பாணாழ்வாரின்
உறையூருக்குப் போனேன் . . .


அமலன், விமலன், நிமலன்,
அமுதன் அரங்கன் அழகிய மணவாளனாய்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .


சோழனின் பெருமையைப் பேசும்,
கோழியும் யானையைத் துரத்திய வீரம்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .


காவேரியின் ஒரு மடியில் பள்ளிகொண்ட அரங்கன்,
இன்னோரு மடியில் அழகிய மணவாளனாய்,
நின்று உறையும் உறையூருக்குப் போனேன் . . .


 பக்தரை ரக்ஷிக்க சீறிப் பாயக் காத்திருக்கும்,
ப்ரயோகச் சக்கரத்தோடு மால் உறையும்,
உறையூருக்குப் போனேன் . . .


கமலவல்லித் தாயார் அமர்ந்திருக்க,
அழகிய மணவாளர் நின்றிருக்க,
ஸ்ரீரங்கம் நம்பெருமாளே உற்சவராய்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .


என்னுள்ளே உறையும் நான் என்னும்
அகந்தை அழிந்து உத்தமன் என்னுள்ளே
உறைய திருப்பாணரே ஆசிர்வதியும்...


என்னுள்ளே ஊறிக்கிடக்கும் காமங்கள்
உருத்தெரியாமல் அழிய கமலவல்லி நாச்சியாரே,
உள்ளே நீ வந்து உறைவாய்....


அழகிய மணவாளா...
என்னையும் நீ உறையும்,
உறையூராய் மாற்ற அருள் செய் இப்போதே ! ! !


நீயே அழைத்தாய் . . .
நீயே தரிசனம் தந்தாய் . . .
நீயே அருள் செய்தாய் . ..

பாரமாய பழவினைப் பற்றறுத்து,
என்னையும் தன் உறையூராய் மாற்றின,
கமலவல்லித்தாயாரின் கருணை
ஐயோ நிறைந்தது என் நெங்சினிலே . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP