ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

நான் என்ன செய்யட்டும் ?

ராதேக்ருஷ்ணா


ஹே கிளியே !
என் க்ருஷ்ணனின் மதுரமான மொழியைக்
கேட்டதால் பேசிக்கொண்டே இருக்கிறாயோ ?


ஹே குயிலே !
என் க்ருஷ்ணனின் வேணு கானத்தைக்
கேட்ட குஷியில் இப்படிப் பாடுகிறாயா ?


ஹே மயிலே !
என் க்ருஷ்ணனைப் பார்த்ததால்
ஆனந்தத்தில் இப்படி ஆடுகிறாயா ?


ஹே யானையே !
நீ என் க்ருஷ்ணனைப் பார்த்த
சந்தோஷத்தில் உடல் பெருத்தாயோ ?

ஹே சிங்கமே !
நீ என் க்ருஷ்ணனின் நடையழகைக்
கண்டபின் இப்படி நடக்கக் கற்றாயோ ?

ஹே காளையே !
நீ என் க்ருஷ்ணனின் உடல் வனப்பைப்
பார்த்தபின்னே இப்படி ஆனாயோ ?

ஹே தாமரையே !
நீ என் கமலக்கண்ணனின் கண்களைப்
பார்த்ததால் இப்படி வெட்கத்தில் சிவந்தாயோ ?

ஹே துளசியே !
நீ என் க்ருஷ்ணனின் திருமேனியை உரசியதால்
இத்தனை சுகந்தத்தை அடைந்தாயோ ?

ஹே ஆகாசமே !
நீ என் ஷ்யாமளனின் திருமேனியை தரிசித்து
தவம் செய்து இந்த நீல வண்ணத்தைப் பெற்றாயோ ?

ஹே மேகமே !
நீ என் கார்மேக வண்ணனின் கருணையைக் கண்டு,
இந்த காருண்யமயமான கருவண்ணத்தை அடைந்தாயோ ?

 ஹே கடலே !
நீ என் கண்ணனை உன்னுள்ளே தேடித் தேடி
இத்தனை ஆழமானாயோ ?

ஹே பூமியே !
நீ என்னுடைய காதலன் கண்ணனின் பொறுமையைக்
கண்டு இத்தனை பொறுமையை அடைந்தாயோ ?

ஹே மலர்களே !
நீங்கள் எல்லோரும் க்ருஷ்ணனின் சிரிப்பைக்
கண்டுதானே இப்படிச் சிரிக்க தெரிந்துகொண்டீர்கள் ?

ஹே சந்தனமே !
நீ என் க்ருஷ்ணனின் தியாகத்தை அனுபவித்துத்தானே
உன்னைத் தேய்ப்பவருக்கும் நறுமணம் தருகிறாய் ?

ஹே மரங்களே !
நீங்கள் எல்லோரும் என் கண்ணனின் திருவடி நிழலின்
சுகம் தெரிந்துதானே எல்லோருக்கும் நிழல் தருகிறீர்கள் ?

ஹே தண்ணீரே !
என் ப்ரபுவின் ஆத்ம தாகம் தணிக்கும் ரஹஸ்யம்
அறிந்ததால் தானே எல்லோர் தாகத்தையும் தணிக்கக்
கற்றுக்கொண்டாய் ?

ஹே இரவே !
நீ என் க்ருஷ்ணனின் கருப்பு வர்ணத்தைப்
பார்த்து மயங்கித்தானே நீயும் கருப்பானாய் ?

ஹே சூரியனே !
நீ என் ஸ்வாமி கண்ணனின் ப்ரகாசத்தைக்
கொண்டுதானே உலகில் ப்ரகாசிக்கின்றாய் ?

சரி  . . .
நீங்கள் எல்லோரும் கண்ணனோடு
சம்மந்தப்பட்டு இத்தனையும்
செய்கின்றீர்கள் ! ! !

சரி . . .
இப்பொழுது நான் என்ன செய்யட்டும் ?
உங்களைப் போல் நான் க்ருஷ்ணனைக்
கண்டு என்ன செய்யட்டும் ? ? ?

ஆஹா . . .
நான் ஒன்று செய்வேன் ! ! !

நான் சுகமாய் க்ருஷ்ணனை அனுபவிப்பேன் !
உங்களில் க்ருஷ்ணனை அநுபவிப்பேன் !
உங்களோடு க்ருஷ்ணனை அனுபவிப்பேன் !

என்னால் இது மட்டுமே முடியும் !

ஐயா ! எனக்கு இது போதுமே !

நான் என் க்ருஷ்ணனை அனுபவிப்பேன் . . .
 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP