ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 அக்டோபர், 2010

முதியோர்கள் . . .

ராதேக்ருஷ்ணா

முதியோர்கள் . . .
பாவப்பட்ட மனிதர்கள் . . .
அன்பிற்காக ஏங்கும் அனாதைகள் . . .
களைத்துப்போன பலமான அன்பர்கள் . . .
ஆசீர்வாதம் தரும் ஆதரவற்றவர்கள் . . .

ஆச்சர்யமான நறுமணம் தந்து,

இன்று நறுமணத்தை இழந்து,
வாடிக்கொண்டிருக்கும் அழகான மலர்கள் . . .


எல்லோரையும் வாழவைக்க,தன்னை
பலவிதமாய் உபயோகப்படுத்த அனுமதித்துவிட்டு 
இன்று விழுவதற்காகக் காத்திருக்கும் கட்டிடங்கள் . . .


அற்புதமான நெல்லையும்,நவ தானியங்களையும்
மூன்று போகம் விளைவித்து,அறுவடை முடிந்து
இன்று யாரும் கவனிக்காத தரிசான வயல்கள் . . .


ஓடி ஓடி உழைத்து எல்லாவற்றையும்
எல்லோருக்கும் தந்துவிட்டு,
இன்று ஓரத்தில் கிடக்கும் அடிமாடுகள் . . .

பலவிதமாய் சமைத்து பல வருஷங்கள்
 உபயோகமான,இன்று வீசியெறியப்பட்ட
நசுங்கிப்போனப் பாத்திரங்கள் . . .
  
இளமையில் தன் குடும்பத்திற்கு 
நிழலும் தந்து,பசிக்கு உணவும் தந்து,
இன்று வறட்சியாய் வெயிலில் காயும் மரங்கள் . . .

குழந்தைகளுக்காக அன்பை மழையாய்
பொழிந்து,இன்று தண்ணீருக்காக
ஏங்கும் பாவப்பட்ட மேகங்கள் . . .

அவரவர் ஆசைப்பட்டு தன் இஷ்டப்படி
பலவிதமாய் எழுதிவிட்டு,இன்று
கசக்கி எறியப்பட்ட காகிதங்கள் . . .

உறவினர்கள் தங்கள் ஆசைகளையெல்லாம் சாயமாய் ஏற்றிவிட்டு,ஆசை தீர உடுத்தித் தூரஎறிந்த நஞ்சுப்போன கிழிந்துகொண்டிருக்கும் பழைய விலைமதிப்பற்ற துணிகள் . . . 

தங்கள் குழந்தைகளின் எல்லா சுமைகளையும்,
சுகமாக சுமந்து,இன்று அவர்களுக்கு
சுமையாய் தெரியும் சுமைதாங்கிகள் . . .


வாரிசுகளை மார்பிலும்,தோளிலும்
தூக்கி தங்கள் தூக்கத்தை இழந்து,
இன்று சாயத் தோளில்லாது ஏங்கும்
தூங்காத வயதான குழந்தைகள் . . .


சம்பாதித்த காலத்தில்,உழைத்த நேரத்தில்
அனைவருக்கும் சோலையாய் தெரிந்து,
இன்று காய்ந்துகிடக்கும் வறண்ட
நீரில்லாத கேட்பாரற்ற பாலைவனங்கள் . . .



இன்னும் புலம்பவேண்டும்...
கனத்த நெஞ்சுடன் காத்திரு . . .

கனத்த நெஞ்சு இருப்பதால் தானே
முதியோரை இப்படி விட்டுவிட்டோம் ! ?

அவர்களின் வலி ஒரு நாள்,
நம்முடைய முதுமையில் சத்தியமாக
நமக்கும் புரியும் . . .

நாளும்,கிழமையும் பார்த்து,
தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை
கொண்டு,இன்று அவர்களால்
பழைய பஞ்சாங்கம் என்று
பரிகசிக்கப்படும் வாயில்லா பூச்சிகள் . . .

உடலில் பலமிருக்கும் போது,
பிள்ளைகளின் வாழ்வில் அக்கறை கொண்டு,
இன்று பலவீனமாகி நிகழ்காலத்தில்
அக்கறையைத் தேடும் ஆதரவற்றவர்கள். . .

குழந்தைகள் தனிமையில் வாடக்கூடாது என்று அதற்காக தங்கள் வாழ்வைத் தொலைத்து,
இன்று தனிமையில் வாடும் அப்பாவிகள் . . .

சொத்தையும்,பலத்தையும்,புத்தியையும்
தந்து பிள்ளைகளுக்கு அன்று ஆலமரமாய்,
இன்றோ ஊன்று கோலே துணையாய் வாழும்,
வாழ்வே சுமையான நடைப்பிணங்கள் !

வாரிசுகளையும் வளர்த்து,வாரிசுகளின்
வாரிசுகளையும் வளர்த்துக்கொண்டு,
தன் வாழ்வை மறந்த பாசக்கைதிகள் !

குழந்தைகளின் இளவயதிலும் அவர்கள்
தேவைகளை கவனித்துக்கொண்டு,
அவர்கள் வாழ்வை தானே கவனித்துக்
கொள்ளும் வயதிலும் அவர்களின்
தேவையே வாழ்வாய் இருக்கும் அடிமைகள் !

இன்னும் என்னவெல்லாம் நான் சொல்ல ?

ஐயோ . . .
இளவயதுக்காரர்களே . . .
உங்களை வாழவைத்த,வாழவைக்கும்,
வயதானவர்களையும் தயவுசெய்து
கொஞ்சம் சந்தோஷமாக வாழவிடுங்களேன் !

வயதானவர்களிடத்தில் உங்கள்
கோபத்தையும்,உதாசீணமான வார்த்தைகளையும்
நெருப்பாய் கொட்டாதீர்கள் . . .

வயதானவர்கள் வாழ்வதால் என்ன லாபம்
என்று தயவுசெய்து யோசித்து,
பாவத்தைச் சம்பாதிக்காதீர்கள் . . .

உங்கள் உடலைப் பாதுகாத்த
வயதானவர்களின் உடலுக்கு ஒரு
மரியாதை தாருங்கள்  . . .

உங்கள் நலனில் அக்கறை கொண்ட
வயதானவர்களின் நலனில் கொஞ்சம்
அக்கறை காட்டுங்கள் . . .

இன்னும் சில வருஷங்களில்
நிரந்தரமாக தூங்கி ஓய்வெடுக்கப்போகும்
வயதானவர்களிடம் கொஞ்சம்
கருணை காட்டுங்கள் . . .

100 பிள்ளைகளையும் யுத்தத்தில் இழந்த,
தனக்கு தீங்கு மட்டுமே செய்த தன் பெரியப்பா திருதராஷ்டிரனையே தர்மர் மிகவும்
ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டார் . . .

அந்தப் பூமியில் பிறந்த நாம்
முதியோரை அழ விடலாமா ?

இது நியாயமா ?
இது தர்மமா ?
இது தெய்வத்திற்கும் அடுக்குமா ?

இந்த பாவத்தை நாம்
எங்கே போய் தொலைப்போம் ?

சத்தியமாக தொலையாது . . .
இந்தப் பாவம் இனியும் தொடரக்கூடாது . . .

முதியோர்களை மதியுங்கள் . . .
முதியோர்களை நேசியுங்கள் . . .
முதியோர்களை அரவணையுங்கள் . . .
முதியோர்களை கொண்டாடுங்கள் . . .
முதியோர்களை ரசியுங்கள் . . .

முதியோரை இனியாவது
நிம்மதியாக வாழவிடுங்கள் . . .
முதியோரை இனியாவது
ஆனந்தமாக சாகவிடுங்கள் . . .
முதியோரை இனியாவது
சந்தோஷமாக வைத்திருங்கள் . . .

முதியோரை வெறுப்பவர்
அரக்கரே . . .
முதியோரை அவமதிப்பவர்
பாபியே . . .
முதியோரை அழவைப்பவர்
பேயே . . .
முதியோரை கவனிக்காதவர்
கிருமியே . . .

முதியோரை நேசிப்பவரே
தேவர் . . .
முதியோரை மதிப்பவரே
மனிதர் . . .
முதியோரை சிரிக்கவைப்பவரே
உத்தமர் . . .
முதியோரை கவனிப்பவரே
மனித தெய்வம் . . .


நீ யார் . . ?

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP