ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 அக்டோபர், 2010

தூது செல் !

ராதேக்ருஷ்ணா

செல்லக்கிளியே !
என் நாச்சியார் ஆண்டாளிடத்தில்
தூதுசெல் . . .

அழகுக்கிளியே !
எங்கள் ராஜாத்தி ஆண்டாளிடம்,
எங்களுக்கு ப்ரேம நிதியை
தானம் தரச் சொல் . . .

பசுங்கிளியே !
எங்கள் சூடிக்கொடுத்த சுடர்கொடியிடம்,
எங்களுக்கு க்ருஷ்ண பக்தியை
ஊட்டச் சொல் . . .

தெய்வக்கிளியே !
எங்கள் ப்ரேம ஸ்வரூபிணி கோதையிடத்தில்
எங்களுக்கு அஹம்பாவமில்லாத
மனதை ஆசிர்வதிக்கச் சொல் . . .

தங்கக்கிளியே !
எங்கள் பெரியாழ்வார் பெண்பிள்ளையிடம்,
எங்களை அவள் தோழிகளாக்கி
விளையாடச் சொல் . . .

பாக்கியக்கிளியே !
எங்கள் வில்லிபுத்தூர் ராணி ஆண்டாளிடம்,
எங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாழ்க்கை
அருளச் சொல் . . .

பச்சைக்கிளியே !
எங்கள் ராமானுஜரின் தங்கையிடம்,
ரங்கமன்னாரிடம் மோக்ஷத்திற்கு
சிபாரிசு செய்யச் சொல் . . .

பைங்கிளியே !
எங்கள் திருப்பாவை பாடிய செல்வியிடம்,
அவளின் கோயிலில் ஒரு கைங்கர்யம்
தரச்சொல் . . .

பட்டுக்கிளியே !
எங்கள் ஞான ஸ்வரூபிணி கோதாவிடம்,
எங்களை ப்ருந்தாவனத்திற்கு
அழைத்துப் போகச்சொல் . . .

காதல்கிளியே !
எங்கள் பட்டர்பிரான் கோதையிடம்,
எங்கள் அறிவை அழித்து, எங்களுக்கு
அறிவொன்றில்லாத ஆயர்குலத்தில்
வாழ அதிகாரம் தரச்சொல் . . .

சமத்துக்கிளியே !


காத்திரு  . . .

கோமளக்கிளியே !
143 திருமொழியாக தன் ப்ரேமையைச்
சொன்ன க்ருஷ்ணனின் காதலியிடம்,
எங்களை அவளின் அடிமையாக்கி
வாழவைக்கச் சொல் . . . 

சமத்துக்கிளியே !
உன்னைப்போல் நாங்களும்
திருப்பாவை பாடிய செல்வியின்
திருக்கைகளில் வாழ ஒரு வரம் தரச் சொல் . . .

ஹே ஆண்டாளின் கிளியே !
உன்னை தூது போகச் சொல்ல
எங்களுக்கு ஒரு அதிகாரம் இல்லை . . .
நாங்கள் அதற்கு தகுதியானவர்களுமில்லை . . .
ஏதோ ஆசையில் உளறிவிட்டோம் . . .
மன்னித்துவிடு . . .

நீ எங்களுக்கு ஆசிர்வாதம் செய் !
நீ எங்களுக்காக ஆண்டாளிடம் சிபாரிசு செய் !
நீ எங்களை ஆண்டாளின் திருவடிகளில் சேர்த்துவிடு !

தெய்வக்கிளியே ! 
உனக்கு அடியோங்களின்
கோடி கோடி வந்தனம்  . . . 




   

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP