ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஆகஸ்ட், 2010

சொன்னால் செய்வாயா ?

ராதேக்ருஷ்ணா


சொன்னால் தெரியாதா ?
எத்தனை தடவை சொல்வது ?
சொன்னால் செய்யமாட்டாயா ?


எத்தனை முறை நாம்
பலரைக் கேட்ட கேள்வி . . .


எத்தனை முறை பலர்
நம்மைக் கேட்ட கேள்வி ?


சொன்னால் செய்வான் என்று
எத்தனை பேரிடம் நமக்கு நம்பிக்கை
இருக்கிறது ?


"சொன்னால் செய்வேன்"
என்று ஒரு அற்புதன்
இருக்கிறான் . . .


வா . . . அவனைப் பார்ப்போம் . . .

வரதராஜனை அனுபவித்த
நாங்கள் அடுத்து
அனுபவித்த
அற்புதனைப் பற்றி
சொல்லவேண்டுமே . . .

வாழ்வில் ரொம்ப நாளாக
பார்க்க ஆசைப்பட்ட
ஒரு அற்புதன் அவன் . . .

வாயால் அவனைப் பற்றி
பல தடவை, பல ஊர்களில்,
சொல்லிச் சொல்லி
அனுபவித்திருக்கிறேன் . . .

ஆனால் ஒரு தடவை கூட
அவன் சன்னிதானத்திற்க்குச்
சென்றதில்லை . . .

அன்று அவனைப் பார்ப்போமா,
இல்லையா என்ற சந்தேகத்தில்,
இதயத்தில் பரபரப்போடு
அந்த அற்புதனின்
திருக்கோயிலுக்கு ஓடினோம் . . .

சரஸ்வதி தேவியின் செருக்கை
அடக்க நதியின் குறுக்கே
அணையாகப் படுத்து,
ப்ரும்மனின் யாகத்தைக் காத்த
அற்புதனாயிற்றே அவன் . . .

திவ்யப்ரபந்தத்திற்கு அடியிட்ட,
முதலாழ்வார்களில் முதல்வரான,
பொய்கை ஆழ்வாரைத் தந்த
அற்புதனாயிற்றே அவன் . . .

யார் அந்த அற்புதன் . . .
தெரிந்தால் தியானம் செய்து கொண்டிரு . . .
தெரியாவிட்டால் யோசித்துக்கொண்டிரு . . .

சீக்கிரத்தில் வருகிறேன் . . .


இதோ வந்துவிட்டேன் . . .


உன்னைக் காக்கவைத்து
மகிழ நான் தயாராகயில்லை . . .


நான் காலம் கடந்து வந்தால்
அதுவும் ஸ்ரீ க்ருஷ்ணனின் லீலையே . . .


சரி . . .அற்புதன் யாரென்று கண்டுபிடித்தாயா ?


வேறு யார் அற்புதன் . . .


நம்முடைய
சொன்ன வண்ணம் செய்த
பெருமாள்தானே . . .


சத்தியமாக அற்புதன் அவனே . . .


அற்புதன் ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த
அழகைக் கூறுகிறேன் . . . கேள் !


திருமழிசை பிரானின் சிஷ்யனான
கணிகண்ணனை,
 தன்னைப் பற்றிப் பாட,
காஞ்சி ராஜன் உத்தரவிட,
நாக்கொண்டு என் பெருமாளையும்,
என் குருவையும் தவிர
வேறு யாரையும் பாடமாட்டேன்
என்றான் உத்தம சிஷ்யன் . . .


கணிகண்ணன் காஞ்சிபுரத்தைவிட்டு
வெளியேற அரசன் ஆணை பிறப்பிக்க,
அவனும் தன் குரு திருமழிசை ஆழ்வாரின்
திருவடிகளில் சரணாகதி செய்தான் . . .


திருமழிசை ஆழ்வாரும்,தன் ப்ரிய
சிஷ்யனை பிரிய மனமில்லாமல்,
இந்த அற்புதனிடம் வந்து,
என் சிஷ்யன் இல்லாத இடத்தில்
உனக்கென்ன வேலை என்றார் . . .


கணிகண்ணன் போகின்றான்,
நானும் போகின்றேன்,
நீயும் உன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்,
என திருமழிசைஆழ்வார் உத்தரவிட,
மறு வார்த்தை பேசாமல்,
உடனே தன் ஆதிசேஷப் பாயைச்
சுருட்டிக்கொண்டு நின்ற
அற்புதன் இவனன்றோ !


ஹே ! கருணாசாகரா . . .
ஹே ! தீன தயாளா . . .
ஹே ! பக்தவத்சலா . . .
ஹே ! ப்ரபோ . . .


நீ சொல்ல மனிதன் கேட்கவேண்டும் . . .
பக்தன் சொல்ல நீ கேட்டாயா . . .
ஹே கருணா சாகரா . . .


ஒரு முறை கேட்பதே
பெரிய விஷயம் . . .


ஆனால் அற்புதன்
மீண்டும் ஒரு முறை கேட்டான் . . .


திருமழிசை ஆழ்வாரோடும்,
கணிகண்ணனோடும்,
மற்ற தேவர்களுடனும்,
ஊரை விட்டு வெளியேறி,
கணிகண்ணன் இஷ்டப்படி,
ஓர் இரவு இருக்கையில்,
ஓரிரவு இருந்து,
மீண்டும் ராஜன் கணிகண்ணனிடம்
மன்னிப்புக் கேட்க,
திரும்பவும் தன் இருப்பிடமான
திருவெஃகாவிற்குத் திரும்பின
அற்புதன் இவனன்றோ . . .

திரும்பி வந்தபோதும்
தன்னிடத்தில் தானாகப் போய்
படுத்துக்கொள்ளாத அற்புதன்
இவன் தானே !

திரும்பவும் திருமழிசை ஆழ்வார்,
கணிகண்ணன் போய் வந்தான்,
உன் அடியவனான நானும் போய் வந்தேன்,
நீயும் உன் பைந்நாகப் பாயை
விரித்துக் கொண்டு படு என்று
அன்புடன் சொன்னவுடன் 
 மீண்டும் படுத்துக்கொண்ட
அற்புதன் இவனே. . .

மீண்டும் படுத்தபோதும்,
தன் பக்தனின் பெருமையையும்,
அவருடைய சிஷ்யனின் பெருமையையும்,
உலகினர் அறியும்படியாக,
இடம்,வலமாக மாறிப் படுத்து,
இன்றும் காட்சி தரும்,
சொன்ன வண்ணம் செய்த
அற்புதன் இவன் தானே . . .

sonna vannam seytha perumal

சொன்ன வண்ணம் செய்தவன்
படுத்திருக்கும் அழகே தனி . . .
இடது கையை தலையில் வைத்து,
வலது கையை வில் பிடித்தாற் போல் கொண்டு,
இடுப்பை வளைத்து ஒய்யாரமாய்,
படுத்திருப்பதைக் காண,
ஆயிரம் கண்கள் போதாது . . .

சரி...
இவன் சொன்ன வண்ணம் செய்தான் . . .

நீ சொன்னால் செய்வாயா ? ! ? 

நான் சொல்வதை செய்வாயா ?

எப்பொழுதெல்லாம் உனக்கு,
தெய்வத்திடம் நம்பிக்கைக் குறைகிறதோ,
அப்பொழுதெல்லாம் இந்த
சொன்ன வண்ணம் செய்த அற்புதனை
நினைத்துக்கொள் . . .

 நிச்சயம் நம்பிக்கை வரும் . . .

 இப்படியே செய்து வர,
ஒரு நாள்,
நீ சொன்ன வண்ணம் செய்வான் . . .

சீக்கிரம் சொல். . .
அவன் தயார் . . .
நீ தான் சொல்லவேண்டும் . . .


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP