ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 மே, 2010

மாடு மேய்க்கப் போ !


ராதேக்ருஷ்ணா

மாடு மேய்க்கப் போ !

உருப்படாதவர்களைச் சாதாரணமாக
மற்றவர்கள் சொல்லும் வார்த்தை !

ஆனால் அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்
ஸ்ரீ க்ருஷ்ணனாக இடையர்
குலத்தில் வந்துதித்தபோது
யசோதா மாதாவும்,
நந்த கோபரும் அவனிடம்
சொன்னது
"மாடு மேய்க்கப் போ !

இனி யாராவது உன்னை
"மாடு மேய்க்கப் போ"
என்று சொன்னால் சந்தோஷப்படு !

க்ருஷ்ணனோடு
மாடு மேய்க்கப் போ !

ப்ருந்தாவனத்தில்
மாடு மேய்க்கப் போ !

கோகுலத்தில்
மாடு மேய்க்கப் போ !

பலராமனோடு
மாடு மேய்க்கப் போ !

கோப குழந்தைகளுடன்
மாடு மேய்க்கப் போ !

பண்டரீபுரத்தில்
மாடு மேய்க்கப் போ !


நீ கணக்கு பார்த்துக்கொள் !

முதலில் நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனோடு விளையாடலாம் !
ஆனந்தமாக விளையாடலாம் !
ஆசை தீர விளையாடலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனை உப்பு மூட்டை தூக்கலாம் !
க்ருஷ்ணன் முதுகில் உப்பு மூட்டை ஏறலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனின் தோள் மீது கை போடலாம் !
உன் தோள் மீது க்ருஷ்ணன் கை போடுவான் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனோடு யமுனையில் குளிக்கலாம் !
க்ருஷ்ணனோடு யமுனையில் நீந்தலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனோடு ஆகாரம் சாப்பிடலாம் !
க்ருஷ்ணனுக்கு ஆகாரம் ஊட்டலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனின் மடியில் படுக்கலாம் !
க்ருஷ்ணனை உன் மடியில் படுக்கவைக்கலாம் !





நீ மாடு மேய்க்கப்போனால்

க்ருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யலாம்!
க்ருஷ்ணன் உனக்கு அலங்காரம் செய்வான் !


 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனின் புல்லாங்குழலோசை கேட்கலாம்!
க்ருஷ்ணனின் புல்லாங்குழலைப் பறிக்கலாம் !


நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனிடம் பனம்பழம் கேட்கலாம் !
க்ருஷ்ணனோடு பனம்பழம் சாப்பிடலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனின் காளிய நர்த்தனம் பார்க்கலாம் !
க்ருஷ்ணனுக்கு முத்தம் தரலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனோடு உருண்டு புரளலாம் !
க்ருஷ்ணனோடு சண்டை போடலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனிடமிருந்து அடி வாங்கலாம் !
க்ருஷ்ணனை நாலு குத்து குத்தலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனை குனியவைத்து
பச்சைக்குதிரை தாண்டலாம் !
உன்னை குனியவைத்து க்ருஷ்ணனும்
பச்சைக்குதிரை தாண்டுவான் !

 நீ மாடு மேய்க்கப்போனால்



க்ருஷ்ணனின் கோமணத்தைத் திருடலாம் !
க்ருஷ்ணனை கெஞ்ச வைக்கலாம் !

  நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனோடு கண்ணாமூச்சி விளையாடலாம் !
க்ருஷ்ணனின் கண்ணைக்கட்டி விளையாடலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
தேவர்களைப் பார்க்கலாம் !
அசுரர்களை பரிகாசம் செய்யலாம் !


 நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனைத் திட்டலாம் !
க்ருஷ்ணனிடமிருந்து திட்டு வாங்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனின் தலையில் கைவைக்கலாம் !
க்ருஷ்ணனும் உன் தலையில் கை வைப்பான் !

 நீ மாடு மேய்க்கப்போனால் 
கோபிகைகளிடமிருந்து வெண்ணை திருடலாம்!
க்ருஷ்ணனை கோபிகைகளிடம் மாட்டிவிடலாம்!

நீ மாடு மேய்க்கப்போனால் 
கொக்கு அசுரனைப் பார்க்கலாம் !
க்ருஷ்ணன் அவனை வதைப்பதையும் காணலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனின் தோளோடு உரசலாம் !
க்ருஷ்ணனின் தோள்களில் தொங்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
பலராமனோடு பேசலாம் !
க்ருஷ்ணனைப் பற்றி கோள் சொல்லலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால் 
பாம்பின் வாயிலும் நுழையலாம் !
மீண்டும் க்ருஷ்ணனால் பிறக்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
கோவர்த்தன மலையில் ஏறலாம் !
மழைக்கு கோவர்தன கிரியில் ஒதுங்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்
ப்ருந்தாவனத்தில் மரமேறி குதிக்கலாம் !
குரங்குகளைத் துரத்தலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனின் எச்சிலைச் சாப்பிடலாம் !
கருஷ்ணனுக்கு எச்சிலைத் தரலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
ப்ராம்மணர்களின் சாப்பாடு சாப்பிடலாம் !
க்ருஷ்ணனின் கருணையை அனுபவிக்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனுக்கு கிச்சு கிச்சு மூட்டலாம் !
க்ருஷணனின் சிரிப்பை ரசிக்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணன் காக்காய் கடி கடித்த
கடலை உருண்டையை திங்கலாம் !
 க்ருஷ்ணன் அதிகமாக எடுத்துக்கொண்டால்
வாயார அவனை ஆத்திரம் தீர திட்டலாம்!


நீ மாடு மேய்க்கப்போனால்,
இதையெல்லாம் விட பெரிய பாக்கியம்
ஒன்று கிடைக்கும் !

ப்ரேமஸ்வரூபினி நம்முடைய
ராதிகா ராணியைப் பார்க்கலாம் !
ராதையின் திருவடிகளில்
சரணாகதி செய்யலாம் !
ராதையும் க்ருஷ்ணனும் சிரிக்கும்
அழகில் உன்னையே இழக்கலாம் .  .  .

அதனால் நேரத்தை வீணடிக்காதே !
உடனே,வேகமாக
மாடு மேய்க்கப் போ !

தினமும் இரவில் யாருக்கும்
தெரியாமல் ப்ரார்த்தனை செய்து,
கனவில் மாடு மேய்க்கப் போ !

ஒரு நாள் ப்ருந்தாவனத்தில்
இடையர் குலத்தில்,
ஒரு கோபனாகப் பிறப்பாய் !

தலையில் முண்டாசுடன்,
கையில் மாடு மேய்க்கும் கோலுடன்,
கட்டுச்சோற்றுடன்,
கொம்பு வாத்தியத்துடன்,
ஊதாங்குழலுடன்,
 காலில் சலங்கையுடன்,
தலையில் மயில் பீலியுடன்,
ஒரு கருப்பன்,
க்ருஷ்ணன் என்ற திருநாமத்துடன்
உன்னோடு மாடு மேய்க்கக் காத்திருக்கிறான் !  
 
சீக்கிரம் ! சீக்கிரம் ! சீக்கிரம் !

உன் பேரைச் சொல்லி அழைத்து,
உன் வீட்டு வாசலில் நிற்கிறான் !

க்ருஷ்ணனோடு மாடு மேய்க்கப் போ !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP