ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஜனவரி, 2010

கடற்கரை !





ராதேக்ருஷ்ணா


கடல் . . .

உலகில் ஆச்சர்யமான ஒன்று . . .
பகவானின் ஸ்ருஷ்டியில் ஆழமான ஒன்று. . .
பலவகை ஜந்துக்களின் வாழ்விடம் . . .

அந்தக் கடலின் கரை....
எல்லோரையும் மயக்கும் கடற்கரை . . .
பல விஷயங்களை போதிக்கும் கடற்கரை . . .

காலார நடந்தாலும் சுகம் . . .
அலையோடு விளையாடினாலும் சுகம் . . .
வேடிக்கைப் பார்த்தாலும் சுகம் . . .
மௌனமாய் உட்கார்ந்திருந்தாலும் சுகம். . .

அந்தக் கடற்கரையில் எத்தனை
பக்தி விஷயங்கள் உண்டு
தெரியுமா . . .

பக்திக் கரையில் கொஞ்சம்
காலார நடந்து அனுபவிக்கலாம்! 
வா !

உன்னுடைய எல்லாவற்றையும்
கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
என்னோடு கை கோர்த்துக் கொண்டு
கொஞ்சம் நடந்து வா . . . 

திருப்பாற்கடல் கரையில்தான்
தேவர்கள் எப்பொழுதும்
பகவானை ஸ்தோத்திரம் செய்வார்கள் !

ஸ்ரீ ராமனும், லக்ஷ்மணனும், தன்னை மறந்து
தூங்கிக்கொண்டிருந்த வானரங்களை
டற்கரையில்தான் காவல் காத்தனர் !

ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, கடற்கரையில்தான்
உலகத்தோருக்கு சரணாகதி மந்திரத்தைச்
சொல்லி விபீஷணனை ஏற்றுக்கொண்டான் !


ஸ்ரீ ராமன், விபீஷணன் சொன்னபடி
இலங்கைக்குச் செல்ல சமுத்திரராஜனிடம்
ப்ரார்த்தனை செய்து கடற்கரையில்தான் 
தர்ப்பசயனத்தில் படுத்திருந்தான் ! 

க்ருஷ்ணன் த்வாரகா கடற்கரையில்தான்
தன்னுடைய 16108 பட்ட மஹிஷிகளோடு
ஆனந்தமாக ராசக்ரீடை ஆடினான் !

ஸ்ரீ அனந்தபத்ம நாப ஸ்வாமி வருஷத்திற்கு
இரு முறை சங்குமுகம் கடற்கரையில்தான்
பக்தர்களோடு ஆராட்டு ஆடுகின்றார் !

ஒரு கடற்கரையில் மத்வாச்சாரியார்
ஜபம் செய்து, நடந்து கொண்டிருந்தபோதுதான்
உடுப்பி க்ருஷ்ணன் அவருக்குக் கிடைத்தான் !

 பூரி ஜகந்நாதன், பூரி கடற்கரையில்தான்
தினமும் பல பக்தர்களோடு நீந்தி,
விளையாடிக் களிக்கின்றான் !

பூரி கடற்கரையில்தான் ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர்,
ஆனந்தமாக பக்தர்களோடு நாம ஜபம் செய்து,
பல க்ருஷ்ண கதைகளை உபன்யாசம் செய்தார் !

பூரி கடற்கரையில்தான் தன்னுடைய ப்ரிய
பக்தன் ஹரிதாஸ் யவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ண
சைதன்யர் சமாதியைச் செய்து, மரமும் நட்டார் ! 

தன்னுடைய மீன் வலையில் அகப்பட்ட 
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரைத் தொட்ட ஒரு செம்படவன், மஹா மந்திரத்தை  ஜபித்து ஆனந்தசாகரத்தில்  திளைத்தது ஒரு கடற்கரையில்தான் ! 

த்வாரகா கடற்கரையில்தான் நரசிம்ம மேத்தாவின்
கடிதத்திற்காக, யாத்ரீகர்களுக்கு த்வாரகாதீசன்
அவர்களுக்கு வேண்டிய தனத்தைத் தந்தான் ! 

புண்டரீக மஹரிஷியின் தாமரையை
வைத்துக்கொண்டு பகவான் நாராயணன்
மஹாபலிபுரத்தில் கடற்கரை மணலில்தான்
ஸ்தல சயனப் பெருமாளாக காட்சி தந்தான் !

திருமங்கையாழ்வார் தன்னை பரகால நாயகியாக
பாவித்துக் கொண்டு, திருவிடவெந்தை
கடற்கரையில்தான் விரஹத்தில் புலம்பினார் ! 

பக்த மீரா த்வாரகாதீசனின் கோயிலின் 
கதவு திறக்க மனமுருகி தன்னுடைய கடைசி கீர்த்தனத்தை த்வாரகா 
கடற்கரையில்தான் பாடினாள் ! 

 ராதேக்ருஷ்ணா !

கடற்கரையே உன்னிடத்தில்
இன்னும் எத்தனை
பக்த விஷயங்கள் ஒளிந்திருக்கிறதோ ?

கொஞ்சம் என் காதோரமாய் சொல் !
நான் மற்றவர்களுக்குச் சொல்வேன் !

எப்படி இருந்தது ?
பக்திக் கரையில் நடந்தது !

இனி காலார பக்தியோடு
கடற்கரையில்
நடந்துபார் . . .

உனக்கும் ஒரு நாள்
கடற்கரையில் விசேஷ அனுபவம்
கிடைக்கும் . . . .







0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP