ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஆனந்தம் ! ஆனந்தம் ! ஆனந்தம் !



 ராதேக்ருஷ்ணா



ஆனந்தம் கொட்டிக்கிடக்கிறது !

அனுபவி ! நன்றாக அனுபவி !

உன் ஆத்மா த்ருப்தியடையும் வரை
அனுபவி !


உலகில் ஆனந்தம் இல்லாத ஒரு
காரியம் கிடையவே கிடையாது !


நீ உன் மனோபாவத்தினால்தான்
க்ருஷ்ணன் கொட்டித்தரும்
ஆனந்தத்தை இழக்கிறாய் !


 காலையில் இருந்து
ஆரம்பித்து
இரவு தூங்கும்வரை
ஆனந்தம் தான் !


தூங்கி எழுந்திருப்பதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணா என்று சொல்லி
க்ருஷ்ணனோடு எழுந்தால். . . 


பல் தேய்ப்பதில் 
ஒரு ஆனந்தம்!
க்ருஷ்ணனோடு இடித்துக்கொண்டு
பல் தேய்ப்பதாக நினைத்தால் . . .


தினமும் குளிப்பதில் 
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனைக் கூப்பிட்டு
அவனைக் குளிப்பாட்டி,
அவனோடு குளித்தால் . . .


 ஆடை மாற்றுவதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனையே ஆடையாக,
 க்ருஷ்ணனே நமக்கு உடுத்தினால் . . .

அலங்காரம் செய்வதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்கு பிடித்தார்போல்
க்ருஷ்ணனே அலங்கரித்து விட்டால் . . .


சமையல் செய்வதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்குப் பிடித்தார்போல்,
க்ருஷ்ணனிஷ்டமாக சமைத்தால் . . . 


சாப்பிடுவதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்கு ஊட்டிவிட்டு,
க்ருஷ்ண ப்ரசாதமாக,
அவனோடு பேசிக்கொண்டு 
பக்தர்களோடு சாப்பிட்டால். . .


படிக்கச் செல்வதில்
ஒரு ஆனந்தம்!
க்ருஷ்ணனிஷ்டப்படி,
பாடத்தை க்ருஷ்ணனுக்காகப்
படித்தால் . . .


சம்பாதிக்கச் செல்வதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனுக்கு விதவிதமான
பூஜைகள்,நிவேதனம் செய்ய,
குடும்பத்தோடு சத்சங்கத்தை அனுபவிக்க, 
க்ருஷ்ணனுக்காக சம்பாதித்தால் . . .

  
 துணி துவைப்பதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனின் ஆடைகளை
தோய்ப்பதாக பாவித்தால் . . .


 பாத்திரம் தேய்ப்பதில்
ஒரு ஆனந்தம் !
யசோதை வீட்டில்
வேலைக்காரியாக நினைத்து
பாத்திரம் தேய்த்தால் . . .


 வீட்டைப் பெருக்குவதில்
ஒரு ஆனந்தம் !
உன் வீட்டை
க்ருஷ்ணனின் திருமாளிகையாக
நினைத்துப் பெருக்கினால் . . .


நடப்பதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ண தரிசனத்திற்காகவே
நான் நடக்கின்றேன் என்ற
சிந்தனையோடு நடந்தால் . . .


பேசுவதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு
அவன் ஆசைப்படும்படி,
அனைவருக்குள்ளும்
இருக்கும் அவனோடு பேசினால் . . .


மூச்சுவிடுவதில் ஒரு ஆனந்தம் !
மூச்சுக்காற்றாக,
க்ருஷ்ணனை உள்ளிழுத்து,
அகம்பாவத்தை வெளியில்விட்டால் . . .


மல,மூத்திரத்தை தள்ளுவதில்
ஒரு ஆனந்தம் !
நம் உடலில் உள்ள
அழுக்கை, க்ருஷ்ணன்
வெளியில் தள்ளுகின்றான்
என்று உணர்ந்தால் . . .


வரவேற்பதில் ஒரு ஆனந்தம் !
அனைவருக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கும்
க்ருஷ்ணனை ஸ்மரித்து,
விருந்தாளிகளை வரவேற்றால் . . .


காத்திருப்பதில் ஒரு ஆனந்தம் !
ஒவ்வொரு நிமிடமும்,
க்ருஷ்ணனோடும், ராதிகாவோடும்
ராசக்ரீடை ஆடுவதற்காக
காத்திருப்பதாக நேரத்தைக் கடத்தினால் . . .


யோசிப்பதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனிஷ்டப்படி அவன்
அடுத்து நம்முடைய வாழ்க்கையில்
என்ன லீலையை, யாரைக் கொண்டு
செய்யப்போகிறான் என்பதை
யோசித்துப் பார்த்தால் . . .


திட்டமிடுவதில் ஒரு ஆனந்தம் !
எந்த நேரமும் க்ருஷ்ணன்
வந்துவிடுவான்; அவன் 
வந்து நமக்காக காத்திருக்காதபடி,
நம் காரியங்களை வேகமாக,
அழகாக செய்ய திட்டமிட்டால் . . .




உதவி செய்வதில் ஒரு ஆனந்தம் !
நம்மை க்ருஷ்ணன் தூண்டி,
அடுத்தவருக்கு உதவி செய்யும்
மனோபாவத்தைத் தந்து, உதவி
செய்கின்ற நிலைமையில் 
வைத்திருக்கிறான் என்று
திடமாக நம்பி உதவினால் . . .


அறிவுரை சொல்வதில்
ஒரு ஆனந்தம் !
உள்ளிருந்து க்ருஷ்ணன்தான்
பேசுகின்றான் என்பதை
புரிந்துகொண்டு, அவனிடத்தில்
பொறுப்பை ஒப்படைத்து,
அறிவுரை சொன்னால் . . .


 ப்ரச்னைகளில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணன்தான் ப்ரச்சனை
என்கிற மாறுவேஷத்தில்
வந்திருக்கின்றான் என்பதை
புரிந்துகொண்டால் . . .


களைத்துப் போவதில்
ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனோடு போட்டி
போட்டுக் கொண்டு,
காரியம் செய்ததால்
வந்த களைப்பு என்று 
எண்ணிக்கொண்டால் . . .


 விளையாடுவதில் ஒரு
ஆனந்தம் !
க்ருஷ்ணனையும்,
ராதிகாவையும்,
அஷ்டசகிகளையும்,
பக்தர்களையும்,
 நம்மோடு சேர்த்துக்கொண்டு 
விளையாடினால் . . . 
 
தாம்பத்தியத்தில் 
ஒரு ஆனந்தம் . . .
க்ருஷ்ணனே சக்தியாகவும்,
ராதிகாவே ஆனந்தமாகவும்,
நம் உடலில் உணர்ந்து,
சரணாகதி செய்து ஈடுபட்டால் . . .

 தூங்குவதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனின் மடியில்
தலை வைத்துக் கொண்டு,
ராதிகா தாலாட்டுப் பாட,
பக்தர்களைக் கட்டிக்கொண்டு,
பாகவதத்தையே தலையணையாக,
ப்ருந்தாவனத்தையே படுக்கையாக,
பக்தியையே போர்வையாகக் கொண்டு
க்ருஷ்ணனுக்காக தூங்கினால் . . .

அர்த்த ராத்திரியில் தூக்கத்திலிருந்து
முழிப்பதில் ஒரு ஆனந்தம் !
க்ருஷ்ணனே நம்மை
எழுப்பிவிட்டு, எங்கோ சென்று
ஒளிந்துகொண்டு நம்மை
கவனிப்பதாகக் கருதினால் . . .

காலையில் எழுந்திருப்பதில்
ஒரு ஆனந்தம்...
ஆண்டாள் நம்மை
க்ருஷ்ணனோடு சேர்த்து
வைக்க, திருப்பாவைப் பாடி
எழுப்புவதாக எழுந்தால் . . . 
 
நான் சொன்னது
ஆனந்தக்கடலின் ஒரு துளிதான் . . .



இன்னும் ஆனந்தம்
கொட்டிக்கிடக்கிறது . . .

உன்னுடைய எல்லாக் காரியங்களிலும்
இதுபோல் நினைத்து செய்து பார்...
உனக்கே வித்தியாசம் தெரியும்  . . . 
 

ஆனந்தம்...ஆனந்தம்...ஆனந்தம்
 இதைத் தவிர மனித
வாழ்க்கையில் வேறு
ஒன்றுமே இல்லை ! ! !

சத்தியம் செய்து சொல்கிறேன் !

க்ருஷ்ணன் ஆனந்தசாகரன் . . .
அவன் எப்படி உனக்குக்
கஷ்டத்தைக் கொடுப்பான் . . ?

நீ தான் அதை வாங்கிக்காமல்
எதையோ ஆனந்தம் என்று
எண்ணி ஏமாந்துகொண்டிருக்கிறாய் . . .

இனிமேல் ஏமாறுவாயா ?
இல்லை
ஆனந்தத்தில் திளைப்பாயா ?






0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP